நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரண தொகை வழங்கிய அப்ரிடி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி தனது அறக்கட்டளையில் இருந்து ரூ.50 லட்சம் பணத்தை நிவாரணமாக வழங்கியுள்ளார்.
ஆப்கானிஸ்தானை மையம் கொண்டு நேற்று தாக்கிய நிலநடுக்கம் பாகிஸ்தானிலும் கடும் விளைவுகளை ஏற்படுத்தியது. இந்தியாவிலும் லேசான அதிர்வுகள் பல மாநில மக்களால் உணரப்பட்டன.
இந்த நில நடுக்கத்தால், பாகிஸ்தானில் 300க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அந்த நாட்டு டி20 கிரிக்கெட் அணி கேப்டனான ஷாகித் அப்ரிடி இன்று பெஷாவர் நகரிலுள்ள லேடி ரீடிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
மேலும், ஷாகித் அப்ரிடி அறக்கட்டளையில் இருந்து ரூ.50 லட்சம் பணத்தை, நிவாரண பணிகளுக்கு வழங்குவதாகவும் அறிவித்தார்.
இதனிடையே துபாயில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரின் 2வது போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை அந்த அணி வீரர்கள் கொண்டாடாமல் புறக்கணித்தனர். நிலநடுக்கத்தால் தங்கள் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளபோது, கொண்டாட்டத்தில் ஈடுபடுவதில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மொத்தமாக அறிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.