இன்றாவது முடிவு கிடைக்குமா, போர் நிறுத்தப்படுமா? - மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தயாரான உக்ரைன் ரஷ்யா
கீவ்: உக்ரைன் - ரஷ்யா இடையே நடந்த முதற்கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால், இன்று மீண்டும் இரு நாட்டு பிரதிநிதிகளும் அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.
Recommended Video
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யா அணு ஆயுதப்போருக்கு தயாராகிவருகிறது என்ற சூழலில், உக்ரைன் மற்றும் ரஷ்யா மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராகி இருக்கின்றன.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் தங்களை ஐரோப்பாவுடன் இணைத்துகொள்ள சொல்லி விண்ணப்பித்திருந்தார். அதன் மீதான ஓட்டெடுப்பை நடத்தியது ஐரோப்பா.

பேச்சுவார்த்தை
இரு தரப்பிலும் போர் தீவிரமாக நடந்துவருகிறது. இரு தரப்பிலும் பொருட் சேதம், உயிர் சேதமும் நடந்திருக்கிறது. உக்ரைன் மீது தீவிரமாக தாக்கியது ரஷ்யா. இதனால் செர்னோபில் உள்ளிட்ட முக்கிய இடங்களைக் கைப்பற்றியது ரஷ்யா. தலைநகர் கீவ் நோக்கி முன்னேறியது ரஷ்ய படை. இந்நிலையில், உக்ரைன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்த நிலையில், ரஷ்யாவும் தயாரானது.

பெலாரஸ்
இதையடுத்து, கடந்த திங்கட்கிழமை இரு நாட்டு பிரதிநிதிகளும் பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை பல மணி நேரம் நடந்தது. ஆனால் இரு தரப்பிலும் எந்த முடிவுக்கும் யாரும் வரவில்லை. அதனால் முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பேச்சுவார்த்தையின் போது, போர் தாக்கத்தை ரஷ்யா குறைத்திருந்தது. பேச்சுவார்த்தை முடிந்தவுடன், மீண்டும் போர் தாக்குதலை அதிகரித்தது.

இரண்டாவது பேச்சுவார்த்தை
போரை நிறுத்துவது தொடர்பாக உக்ரைன் மீண்டும் பேச்சு வார்த்தைகளை தொடங்க தயாராக இருப்பதாக உக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார். இதையடுத்து போலந்தின் எல்லையில் இருக்கும் பெலாரஸின் பிரெஸ்ட் பகுதியில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் தூதுக்குழுவினர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக புதின் உதவியாளரும் ரஷ்யாவின் தூதுக்குழுவின் தலைவருமான விளாடிமிர் மெடின்ஸ்கி தெரிவித்துள்ளார்.

தாக்குதல்
பேச்சுவார்த்தை நடக்கவிருக்கும் நிலையில், உக்ரைனில் இருக்கும் முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது ரஷ்யா. 2-வது கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஏற்கெனவே கூறியிருந்தார். ஆனாலும் ரஷ்யா தொடர் தாக்குதலில் ஈடுபட்டது. ராக்கெட் மூலம் கார்கீவ் நகரை ரஷ்யா தாக்கி வருகிறது. குடியிருப்புகள் மீது ராக்கெட் குண்டு வீச்சு மூலம் தாக்குதல் நடத்தி வருவதாக ரஷ்யா மீது உக்ரைன் அதிபர் குற்றம் சாட்டியுள்ளார். மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கவுள்ள நிலையில், போர் நிறுத்தப்படுமா, இந்த பேச்சுவார்த்தையின் மூலம் சுமூக முடிவு எட்டப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications