பெஷாவர் தாக்குதல் தீவிரவாதி உமர் மன்சூர் கொல்லப்பட்டதை உறுதி செய்தது அமெரிக்கா!
காபூல்: பாகிஸ்தான், பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளி மீது தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 140 பள்ளி மாணவர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி உமர் மன்சூர், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படை நிகழ்த்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
பாகிஸ்தானில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளியில் தலீபான் பயங்கரவாதிகள் புகுந்து சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் 122 பள்ளி மாணவர்கள் 22 ஆசிரியர்கள் பலியாகினர். உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த தாக்குதலுக்கு மூளையாக உமர் மன்சூர் செயல்பட்டது தெரியவந்தது.
இந்த தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் அதிகரித்ததால், ஆப்கானிஸ்தானுக்கு தப்பி ஓடிய மன்சூர் கைபர் பழங்குடியின பகுதியில் இருந்து செயல்பட்டு வந்தார். இந்த தாக்குதலையடுத்து உமர் மன்சூரை, சர்வதேச பயங்கரவாதியாக கடந்த மே மாதம் 25 ஆம் தேதி அமெரிக்கா அறிவித்தது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணம், பந்தார் பகுதியில் அமெரிக்கா நிகழ்த்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் பெஷாவர் பள்ளி தாக்குதலில் மூளையாக செயல்பட்ட உமர் மன்சூர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. உமர் கொல்லப்பட்டிருப்பது தலிபான்களுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
ஆனால் உமர் மன்சூர் கொல்லப்பட்ட தகவலை தலிபான்கள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில் உமர் மன்சூர் கொல்லப்பட்டதை அமெரிக்க ராணுவக் குழுவின் தளபதி ஜெனரல் ஜான் நிக்கல்சன் உறுதிபடுத்தியுள்ளார்.