சுலைமானியை அமெரிக்கா தொட்டிருக்க கூடாது.. தப்பு பண்ணிட்டீங்க பிரதர்.. பெரிய தப்பு பண்ணிட்டீங்க!
3ம்உலக போர் எழ வாய்ப்புகள் குறைவே என்று தெரிகிறது
Recommended Video
டெஹ்ரான்: ஈரான் - அமெரிக்க பிரச்சனையால் உலக நாடுகள் பதற்றத்தில் உள்ளன.. எந்த நேரத்திலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.. அப்படியானால் 3ம் உலக போர் நடக்க வாய்ப்பு உள்ளதா? அமெரிக்கா தன் பேராசையை அடக்கி கொள்ள முற்படுமா? அல்லது ஆத்திரத்தில் உள்ள ஈரான் இனி அடுத்தடுத்த எதிர்வினையில் இறங்குமா? என்ற பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.
அமெரிக்காவுக்கு இப்போது அதிக அளவிற்கு பெட்ரோலும் டீசலும் தேவைப்படுகிறது.. இந்த எண்ணெய் வளத்தை கபளீகரம் செய்வதை பல வருட காலமாகவே முயற்சியை கையில் எடுத்து வருகிறது அமெரிக்கா.
எந்த நாட்டிலும் எதிர்க்கட்சிகள் உண்டு.. அரசுகளுக்கு எதிரான அமைப்புகளும் உண்டு.. அரசுகளின் கொள்கை நடைமுறைகள் தடம் புரளும்போது, தவறுகள் நடக்கிறது ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டங்களும் கிளர்ச்சிகளும் நடக்கும்.. இது ஜனநாயக சாமான்ய மக்களுக்கு வழங்கியுள்ள ஒரு வரப்பிரசாதம்.
எல்லோரும் கைவிரித்தார்கள்.. ஈரானை தாக்காமல் கடைசி நேரத்தில் பின்வாங்கிய டிரம்ப்.. பரபர காரணம்!
லத்தீன் அமெரிக்கா
ஐநாவை அப்போதிருந்தே தலையாட்டி பொம்மையாக வைத்துவிட்டு, நேட்டோ படைகளின் பலத்தை பயன்படுத்தி இஸ்லாமிய நாடுகளில் ஒவ்வொன்றாக பாழ்படுத்தி வருகிறது அமெரிக்கா.. 15 ஆண்டுகளுக்கு முன்புகூட லத்தீன் அமெரிக்காவிலும் அதன் நாடுகளை தன் பிடியில் கொண்டுவர அமெரிக்கா எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டு, இறுதியில் அதற்கு தோல்விதான் மிஞ்சியது.
அதிபர் புஷ்
ஏற்கனவே சிரியா, எகிப்து போன்ற இஸ்லாமிய நாடுகளில் உள்ள அரசுகளுக்கு எதிராக அதிருப்தியாளர்களை உசுப்பிவிட்டு, ராணுவம் உள்ளிட்ட உதவிகள் அளித்து எதிர்ப்புரட்சி இயக்கங்களை வழி நடத்தியது. ஈராக்கில் அணு ஆயுதங்கள் குவிக்கப்பட்டிருப்பதாக பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி அன்று அதிபர் புஷ் பகிரங்கமாகவே தனது நாட்டின் ராணுவத்தை அனுப்பி வைத்தார்.. பதுங்கு குழியில் பதுங்கியிருந்த சதாம் உசேனை இழுத்து வந்து விசாரணை என்ற பெயரில் விசாரித்து மரண தண்டனையை நிறைவேற்றுவதாக கூறி அவரை தூக்கிலிட்டார்.. அப்படித்தான் கடாபி உயிரோடு பிடித்து கொடூரமான முறையில் கொன்று சாக்கடையில் வீழ்த்தி லிபியாவின் சகாப்தத்தை முடித்தது அமெரிக்கா.
கோரப்பசி
இப்படி இறந்தவர்கள் தனிநபரோ, அறிமுகமில்லாதவரோ, ஆதரவில்லாதவர்களோ இல்லை.. ஒவ்வொருவரும் ஒரு தேசத்தின் தலைவர்கள்.. இவர்களின் மரணத்திற்கு பின்னால், அந்தந்த நாட்டின் மக்களும்தான் அடங்குவர். அப்படி பார்த்தால், இந்த 15 வருட காலத்தில் அமெரிக்காவின் கோரப்பசிக்கு இரையானது லட்சக்கணக்கான அப்பாவி மனித உயிர்கள் என்பதையும் மறந்துவிட முடியாது.
ஈரான்
தமிழில் ஒரு சொல்லாடல் உண்டு.. "ஒரு நாயை கொல்ல வேண்டுமானால் அதற்கு வெறி பிடித்து விட்டதாக கூற வேண்டும்" இதுதான் அமெரிக்கா சொல்லும் காலங்காலமான சாக்கு! எகிப்து, ஈராக், சிரியா, லிபியா நாடுகளை வீழ்த்திவிட்டு, அடுத்ததாக ஈரான் பக்கம் திரும்பியுள்ளது அமெரிக்கா!
"ஆல் இஸ் வெல்"
எப்படியாவது வளங்களை கைப்பற்ற வேண்டும் என்ற ஆத்திரமும், பேராசையும்தான் எந்த எல்லைக்கும் அமெரிக்கா போகும் என்பதை உலகம்சில தினங்களாக கண்கூடாக பார்த்து வருகிறது. மொத்தம் 80 பேர் அமெரிக்க படைகளில் உயிரிழந்ததாக ஈரான் சொன்னாலும், அமெரிக்கா அது சம்பந்தமாக எதையும் உறுதியாக சொல்லவில்லை.. "ஆல் இஸ் வெல்" என்று அதிபர் சொல்கிறார் என்றால்.. இறந்தது ஒன்றும் அமெரிக்க படையினர் கிடையாது.. அப்படி அமெரிக்க படையினராக இருந்திருந்தால் இந்த ட்வீட்டை அதிபர் போட வாய்ப்பே இருக்காது. அதனால் போர் என்ற வாய்ப்பு குறைவு என்றுகூட சொல்லலாம்!
அணு ஆயுதங்கள்
அப்படியானால் 3-ம் உலக போரே நடக்காதா என்றால்.. அப்படியும் நம்மால் உறுதியாக சொல்லிவிட முடியாது.. ஒருவேளை போருக்கான உத்தரவை ட்ரம்ப் பிறப்பித்தால், ஈரான் பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது.. பதிலுக்கு எதிர்வினையை ஆற்றும் முடிவில் இறங்கும் என்றே தெரிகிறது. காரணம் ஈரானிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. எடுத்து நாலா பக்கமும் வீசினால் கதை கந்தலாகி விடும்.
சுலைமானி
எல்லாவற்றிற்கும் மேலாக சுலைமானியின் மரணம், எந்த உச்சத்துக்கும் அவர்களை கொண்டு சென்று நிறுத்தி உள்ளது. காரணம் சுலைமானியின் இழப்பு என்பது ஈரானுக்கு மிக மிகப் பெரிய ஈடு கட்ட முடியா பேரிழப்பாகும். ஈரான் ராணுவத்திற்கு தனிப் பெருமையைத் தேடித் தந்தவர்தான் சுலைமானி. பார்த்து பார்த்து தனது ராணுவத்தை யாரும் நெருங்க முடியாத அளவுக்கு வலுவாக்கியவர் சுலைமானி.
பாதுகாப்பு அரண்
யாருக்குமே பயப்படாத இஸ்ரேல் கூட ஈரானை கண்டால் யோசிக்கும் அளவுக்கு வலுவாக்கி வைத்திருந்தவர் சுலைமானி. அப்படிப்பட்டவரைத்தான் தற்போது அமெரிக்கா வீழ்த்தி ஈரானின் கடும் கொதிப்பை சம்பாதித்துள்ளது. தனது மூளையை பறி கொடுத்து நிற்கிறது ஈரான் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு சுலைமானி மிகப் பெரிய பாதுகாப்பு அரணாக ஈரானுக்கு திகழ்ந்து வந்தார்.
தாக்குதல்கள்
அதனால் அமெரிக்க படைகள் மீது வாலண்ட்ரியாகவே தாக்குதல் நடத்தவும் கூட முயலலாம். அப்படி ஒரு தாக்குதலை ஈரான் ஆரம்பித்தாலும், அமெரிக்கா தன் டெரர் முகத்தை பகிரங்கமாகவே வெளிப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. கையில் என்னென்ன வித்தைகள் உள்ளதோ.. அவ்வளவையும் ஈரான் அழிவுக்கு அமெரிக்கா பயன்படுத்தும். அதனால் போர் வரவே வராது என்பதை உறுதியாக இந்த நேரத்தில் சொல்ல முடியவில்லை.
வெறித்தனம்
ஆனால் ஒன்றை மட்டும் சொல்ல தோன்றுகிறது.. சுலைமானியை அமெரிக்கா தொட்டிருக்கக்கூடாது.. இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒட்டுமொத்த வெறித்தனமும் இதில் வெளிப்பட்டுவிட்டது.. இந்த நிமிடம் வரை ஈரான் மக்கள் அவ்வளவு கொதிப்பில் உள்ளனர்.. கிட்டத்தட்ட ஈரான் மீதான நேரடி யுத்தம் என்றே இதை குறிப்பிடலாம். ஈரான்.. அமெரிக்காவுக்கு இன்னொரு வியட்நாம் ஆகுமா என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக தற்போது உள்ளது. இது எங்கே போய் முடியுமோ தெரியவில்லை!!