உலக வானிலையை ஆட்டிப் படைக்கும் 'எல் நினோ' உருவாகுகிறது.. அமெரிக்க வானிலை ஏஜென்சி வார்னிங்
Recommended Video
வாஷிங்டன்: பசிபிக் பெருங்கடலில், அடுத்த 6 மாதங்களுக்குள், 'எல் நினோ' உருவாக்கத்திற்கான அம்சங்கள் பக்காவாக உள்ளது என்று எச்சரித்துள்ளது அமெரிக்காவை சேர்ந்த தேசிய கடல் மற்றும் சூழல் நிர்வாக ஏஜென்சி (NOAA).
பசிபிக் பெருங்கடலில், 'எல் நினோ' எனப்படும், பருவநிலை மாற்றத்திற்கான விதை அவ்வப்போது உருவாகுகிறது. இரண்டிலிருந்து 7 வருடங்களுக்கு ஒரு முறை தொடர்ச்சியாக பெருவின் கடல் கரையோரத்தில் வரும் சூடேறிய நீரோட்டமே சுறுக்கமாக எல் நினோ.
நீர் சூடாவதன் மூலம், பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் மட்டுமின்றி, உலகமெங்குமே அதன் தாக்கம் எதிரொலிக்கும். ஒன்று, மழை கொட்டி வெள்ள சேதம் ஏற்படும், அல்லது அப்படியே மாறாக, கடும் வறட்சி நிலவி பஞ்சம் ஏற்படும். இவ்விரு மோசமான தாக்கங்களையும் உருவாக்க கூடியது 'எல் நினோ'.
டிசம்பரில் உருவாகும்
ஸ்பானிய மொழியில், 'எல் நினோ' என்றால் குழந்தை யேசு என்பது பொருளாகும். பொதுவாக கிறிஸ்துமஸ் காலத்தையொட்டி 'எல் நினோ' பசிபிக் பெருங்கடலில் உருவாகுவது வாடிக்கை. இந்தியாவை பொறுத்தளவில் 'எல் நினோ' மாறுபாடான வானிலை தாக்கங்களை கொடுத்துவந்துள்ளது. இவ்வாண்டு அது எந்த மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பது தெரியவில்லை.
எல் நினோ பாதிப்பு
1997, 2002, 2004, 2009 மற்றும் 2014ம் ஆண்டுகளில், 'எல் நினோ' உருவாக்கத்தின் காரணமாக, இந்தியாவில் கடும் பஞ்சம், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இவ்வாண்டு தற்போது எல் நினோ உருவாக்கத்திற்கான சாத்தியக் கூறுகள் அனைத்தும் இருப்பதாகவும்,, 6 மாதங்களில் அது முழுமை பெற வாய்ப்புள்ளதாகவும், வானிலை ஏஜென்சி கூறியுள்ளது. எனவே வரும் பருவமழைக் காலங்களில் அது எந்த மாதிரி தாக்கத்தை இந்தியாவில் ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆஸ்திரேலிய பகுதிகளில் மழை
இந்தோனேஷியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் அருகில் சூரியன் மேற்கே இருக்கும் மேல்மட்ட தண்ணீர்களை சூடாக்கும்போது ஈரக்கசிவுள்ள காற்று வளிமண்டலத்தில் மேலே செல்வதால் தண்ணீரின் மேற்பரப்புக்கு அருகில் தாழ்வான அழுத்த மண்டலம் உருவாகிறது. மேலே செல்லும் காற்று குளிர்ந்து ஈரத்தை விடுவித்து அந்தப் பகுதிக்கு மழையை கொண்டுவருகிறது.
இந்தியா நிலை
வளிமண்டலத்தின் மேற்பகுதியிலுள்ள காற்று வறட்சியான காற்றை கிழக்கே விரட்டிவிடுகிறது. கிழக்கே அது பயணப்படுகையில் காற்று அதிக குளிர்ச்சியாகவும் வேகமாகவும் வீசி பெருவையும் ஈக்குவடாரையும் அடையும்போது கீழே இறங்க ஆரம்பிக்கிறது. இதனால் கடல் மேற்பரப்புக்கு அருகில் உயர் அழுத்த மண்டலம் உருவாகிறது. இதனால் ஆஸ்திரேலியா உள்ளடக்கிய கிழக்கு பகுதிகளில் நல்ல மழை பெய்கிறது. ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் எந்த மாதிரி வானிலை மாற்றம் ஏற்படும் என்பதைத்தான் கணிக்க முடியாது.