ஒரே உறையில் இரண்டு வாள்கள்... மாஜி மாண்புமிகு Vs சிட்டிங் மாண்புமிகு... குமரி மாவட்ட கோதா.!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அமைச்சர்கள் ஆய்வுக்கு வரும் போது அங்கு ஆஜராகும் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், உள்ளூர் அமைச்சரான மனோ தங்கராஜ் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை.
உட்கட்சி அரசியல் காரணமாக மனோ தங்கராஜ் பங்கேற்கும் அரசு விழாக்களில் பங்கேற்பதை முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் தவிர்த்து வருகிறார்.
இதனிடையே அண்மையில் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஆய்வுக்குச் சென்ற சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனுடன் சுரேஷ்ராஜனும், மனோதங்கராஜும் ஒன்றாக கலந்துகொண்டாலும் கூட இருவரும் பேசிக்கொள்ளவில்லை.
தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் இல்லை.. கொங்கு நாடு கோரிக்கைக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி!
கன்னியாகுமரி
தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரியை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு வலிமை சற்று அதிகம் உள்ள பகுதியாகும். திமுக -காங்கிரஸ் கூட்டணி காரணமாக அந்த மாவட்டத்தில் இந்த இரண்டு கட்சிகளும் மட்டுமே அதிகம் வெற்றிபெறும். இதனிடையே நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் பாஜக வேட்பாளர் காந்தியிடம் தனது வெற்றியை பறிகொடுத்தார் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன்.
அமைச்சர் பதவி
இதேபோல் கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரத்திடம் வெற்றியை பறிகொடுத்தார் ஆஸ்டின். இதனால் அவர்கள் இருவரது அமைச்சர் கனவும் பொய்த்து போனது. இந்நிலையில் பத்மநாபபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மனோதங்கராஜுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிகள்
சுரேஷ்ராஜன் மற்றும் ஆஸ்டின் ஆகிய இருவரையும் விட ஜூனியர் மனோ தங்கராஜ். இதனிடையே கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைச்சர் மனோதங்கராஜ் பங்கேற்கும் அரசு விழாக்களில் குறிப்பாக நாகர்கோவில் பகுதியில் நடைபெறும் ஆய்வுகளில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் தலைகாட்டுவதில்லை. ஆனால் அதேநேரம் வெளியூர்களை சேர்ந்த அமைச்சர்கள் யாராவது கன்னியாகுமரிக்கு வருகை தந்தால் அவர்களுடன் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார்.
3 நாட்கள்
3 நாட்களுக்கு முன்னர் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கன்னியாகுமரிக்கு வந்த போது கூட, அவருடன் பேச்சிப்பாறை அணை, சிற்றார் அணை, திருவள்ளுவர் சிலை, என அனைத்து இடங்களுக்கு சுரேஷ் ராஜன் சென்றார். அப்போது உள்ளூர் அமைச்சர் என்ற முறையில் மனோதங்கராஜும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆனால் ஒருவருக்கொருவர் முகம் கொடுத்து கூட பேசிக்கொள்ளவில்லை என்கின்றனர் அதில் பங்கேற்றவர்கள்.
எளிமை
மாஜி மாண்புமிகு மற்றும் சிட்டிங் மாண்புமிகு என இருவருமே மாவட்டச் செயலாளர்களாக இருப்பதால் இருவரையும் சமமாகவே நடத்துகிறது கட்சி மேலிடம். இதனிடையே மனோதங்கராஜை எளிமையாக யார் வேண்டுமானாலும் அனுக முடியும் என்பது குமரி மாவட்ட அரசியலில் அவருக்கு ப்ளஸாக உள்ளது.
பல மாவட்டங்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் தான் இது போன்ற பிரச்சனை என எண்ணத் தேவையில்லை. பெரும்பாலான மாவட்டங்களில் குறிப்பாக இரண்டு அமைச்சர்களை கொண்ட மாவட்டங்கள் மற்றும் ஜூனியர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு தரப்பட்ட மாவட்டங்கள் என பல இடங்களிலும் இதேபோன்ற அக்கப்போர் தான் நடந்து வருகிறது.