கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு கொரோனாவா?.. ஆனால் அரசு செய்திக் குறிப்பில் அப்படி சொல்லலையே!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்முறையாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது என செய்திகள் வெளியான நிலையில் தற்போது வந்த கொரோனா குறித்த அரசு செய்திக் குறிப்பில் கிருஷ்ணகிரியில் கொரோனா பாதிப்பு உறுதி குறித்து எந்த தகவலும் இல்லாதது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடிவடையும் நிலையில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
எனினும் பச்சை மண்டலங்களில் தளர்வுகளை கொடுக்கலாம் என்றும் அறிவித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பச்சை மண்டலங்களில் தொழில் தொடங்க அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு? அமைச்சரவை முடிவு.. இன்று வெளியாகிறது அறிவிப்பு
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 176 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமே பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டது. மற்ற மாவட்டங்கள் சிவப்பு மற்றும் ஆரஞ்சு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டன.
கொரோனா தொற்று
இந்த நிலையில் தமிழகத்தில் பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு முதல் முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. வேப்பனஹள்ளி அருகே நல்லூரைச் சேர்ந்த 67 வயது முதியவருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
எங்கு சென்றுவந்தார்
விசாரணையில் இந்த முதியவர் ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு சென்றுவிட்டு 2 மாதங்கள் கழித்து கடந்த 4 நாட்களுக்கு முன்னர் கிருஷ்ணகிரி திரும்பியது தெரியவந்தது. இவருடன் சென்ற மேலும் 4 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அது போல் அந்த முதியவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் இவர்கள் வசித்து வந்த தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு
ஏற்கெனவே புட்டபர்த்தி சாய்பாபா கோயிலுக்கு சென்று வந்த கடலூரை சேர்ந்த 69 வயது முதியவருக்கு கொரோனா உறுதியானது குறிப்பிடத்தக்கது. இதுவரை கொரோனா பாதிக்காத மாவட்டமாக இருந்து வந்த நிலையில் கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது தமிழக அரசை கவலையடையச் செய்துள்ளது.
வழக்குப் பதிவு
ஆந்திரா சென்று இரண்டு மாதங்கள் கழித்து அனுமதி இல்லாமல் மாவட்டத்திற்கு வந்ததால் 67 வயது முதியவர் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரியில் வரும் 4 ம் தேதி முதல் 50 சதவீத தளர்வு வழங்க இருந்த நிலையில் இன்று வைரஸ் தொற்று உறுதியாக உள்ளது. இதனால் ஆரஞ்சு மண்டலத்திற்கு சென்ற கிருஷ்ணகிரி பகுதியில் தளர்வு நிறுத்தப்படும் என்று தெரிகிறது.
உண்மையா
கிருஷ்ணகிரியில் முதல் கொரோனா தொற்று என்றும் பச்சை மண்டலத்திலிருந்து ஆரஞ்ச் மண்டலத்திற்கு வந்த கிருஷ்ணகிரி என்றும் பல செய்திகள் வெளியானது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறித்த அரசு செய்திக் குறிப்பில் கிருஷ்ணகிரியில் கொரோனா தொற்று உறுதியானது போன்ற தகவல் ஏதும் இல்லை. இது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதுகுறித்து அரசு விளக்கும் வரை அந்த செய்தியை நம்புவதற்கில்லை.