மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் கட்டாயம் கொண்டு வரப்படும்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
மதுரை: மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் கட்டாயம் கொண்டு வரப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் அமைச்சர் செல்லூர் ராஜு வை ஆதரித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி பழங்காநத்தம் பகுதியில் தேர்தல் பரப்புரை செய்தார். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அமைச்சர் செல்லூர் ராஜு என்றாலே தெரியாமல் இருப்பவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். நல்ல மதிப்பு பெற்ற வேட்பாளர் அமைச்சர் செல்லூர் ராஜு. அமைச்சர் செல்லூர் ராஜு அவர்களை பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
அதிமுக தலைமையிலான கூட்டணி பலமான கூட்டணியாக அமைத்து மக்களை சந்திக்கிறோம். மக்களின் பிரச்சினைகளை தீர்க்க கூடிய கூட்டணி. ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு திட்டமிட்டு அவதூறுகளை பரப்பி வருகிறார் திமுக மு க ஸ்டாலின்.
குடும்ப அரசியல்
திமுக ஒரு குடும்ப வாரிசு அரசியல் முதலில் கலைஞர், அடுத்ததாக ஸ்டாலின்,தற்போது உதயநிதி ஸ்டாலின் என அவரது குடும்பத்தை மட்டும் தான் மு க ஸ்டாலின் வளர்த்து வருகிறார் திமுகவை ஒருபோதும் வளர்க்கவில்லை.
கொள்ளையைடிக்கிறது
கலைஞர்,ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின், இன்பநிதி என பல நிதிகளை வைத்து நாட்டின் நிதிகளை திமுக குடும்பம் கொள்ளையடித்துக் கொண்டு வருகிறார்கள்.
திமுகவைப் பொறுத்தவரை 20 திமுக வாரிசுகள் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிடுகின்றனர். இதற்கு முன்னதாக ஸ்டாலின் பேசும்போது எனது மகன் அரசியலுக்கு வரமாட்டார் என்று கூறினார். ஆனால் சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறார்.
காற்றிலும் ஊழல்
திமுக கட்சியில் பிரச்சாரம் செய்வதற்கு ஆட்கள் இல்லையா? திமுகவின் முக்கியத் தலைவர்களை வைத்து பிரச்சாரம் செய்யாமல் உதயநிதி ஸ்டாலினை வைத்து பிரச்சாரம் செய்து வருகிறார். திமுகவின் நிலைமை தற்போது பரிதாபமாக போய்க்கொண்டிருக்கிறது.அதிமுக ஒரு ஜனநாயக இயக்கம் சாதாரண தொண்டன் கூட அமைச்சராக எம்எல்ஏ ஆக முடியும் ஏன் முதல்வர் கூட ஆக முடியும். அதிமுகவில் உழைப்பவர்களுக்கு பதவிகள் தானாக தேடி வரும். .அதிமுக கொடி பறக்குதா? தற்போது அதிமுகவில் கொடி காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. அந்த கண்ணுக்கு தெரியாத காற்றைக் கூட ஊழல் செய்த கட்சி திமுக கட்சி.
மதுரையில் மெட்ரோ
நல்லவர்களையும் கெட்டவர்களையும் மக்கள் பிரித்துப் பார்க்கவேண்டும் கெட்டவர்கள் ஆகிய திமுகவை ஒதுக்கவேண்டும் நல்லவர்கள் ஆகிய அதிமுகவை ஆதரிக்க வேண்டும். திமுக என்னும் தீய சக்தியை தமிழகத்தில் காலூன்ற விட கூடாது.அராஜகம் பிடித்த கட்சி திமுக. அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் ஸ்டாலின் மதுரைக்கு வந்தார் .நம்ம ஆட்சியில் மதுரையில் கால் வைக்க முடிய வில்லை. அதிமுக ஆட்சியில் மக்களுக்கு எந்தவித நன்மையும் நடக்கவில்லை என மு க ஸ்டாலின் பொய்யாக பரப்புரை செய்கிறார். மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் கட்டாயம் கொண்டு வரப்படும்" இவ்வாறு பேசினார்.