மதுரை அருகே திடீரென தடம்புரண்ட பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்.. விரைந்து வந்த அதிகாரிகள்.. நடந்தது என்ன?
மதுரை: சென்னையிலிருந்து செங்கோட்டைக்கு செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை தடம்புரண்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியன்று அதிக அளவில் மக்கள் சொந்த ஊருக்கு சென்றுகொண்டிருந்த நிலையில் இந்த விபத்து நடந்திருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
ஆனால் விபத்தில் பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. உயிரிழப்பும் ஏற்படவில்லை. எனவே ரயில்வே பணியாளர்கள் விரைவாக சீரமைப்பு பணிகளை மேற்கொண்ட பின் ஒரு மணி நேரம் தாமதமாக ரயில் மீண்டும் பயணத்தை தொடங்கியது.

இந்த விபத்து குறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
நேற்றிரவு சென்னையிலிருந்து திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டைக்கு புறப்பட்டது பொதிகை எக்ஸ்பிரஸ். இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் ஏற்கெனவே முன்பதிவு முழுவதும் ஏறத்தாழ நிறைவடைந்திருந்தது. முன்பதிவில் டிக்கெட் கிடைக்காததால் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இருக்கைகளில் இல்லாத நிலையில் பயணிகள் படிகளிலும், பெட்டிகள் வைக்கும் அடுக்குகளிலும் ஏறி இடம்பிடித்துக்கொண்டனர்.
இந்நிலையில் செங்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த பொதிகை எக்ஸ்பிரஸ், திண்டுக்கல் கடந்து அதிகாலை மதுரை நோக்கி வந்துகொண்டிருந்தது. இந்நிலையில் சுமார் 4.15 மணியளவில் மதுரை ரயில் நிலையத்திற்கு முன்பாக மதுரை கோட்ஸ் பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் எக்ஸ்பிரஸின் இன்ஜின் தடம்புரண்டது. ரயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்ததால் ரயில் லேசான வேகத்தில் இயக்கப்பட்டிருந்தது. எனவே பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை அறிந்த ரயில்வே பணியாளர்கள் விரைவாக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த பணியின் காரணமாக பயணிகள் அவதியுற்றனர். பின்னர் தண்டவாளத்தில் ரயிலின் இன்ஜின் மீண்டும் பொருத்தப்பட்டு பயணம் தொடரப்பட்டது. ரயில் முழுக்க பயணிகள் இருந்த நிலையில் ரயில் வேகமாக வந்து தடம்புரண்டிருந்தால் பயணிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பார்கள் என ரயில்வே பணியாளர்கள் கூறியுள்ளனர்.
விபத்தில் உயிரிழப்போ, காயமோ எதுவும் ஏற்படாத நிலையில் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த ரயில்வே துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதேபோல கடந்த மார்ச் மாதம் செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு திரும்பிக்கொண்டிருந்த பொதிகை ரயில், தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் ஒருமணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது. சங்கரன்கோவில் அருகே தண்டவாளத்தில் மழை காரணமாக மரம் ஒன்று சாய்ந்திருந்தது. எனவே ஊழியர் மரத்தை அப்புறப்படுத்திய பின்னர் ரயில் மீண்டும் பயணத்தை தொடர்ந்து.












Click it and Unblock the Notifications