தீபாவளிக்கு துணி வாங்க போன போது விபரீதம்.. ஷேர் ஆட்டோ லாரி மோதல்.. 6 பேர் பரிதாப பலி
மதுரை: தீபாவளிக்கு துணி வாங்க ஷேர் ஆட்டோவில் சென்ற 6 பேர் சாலை விபத்தில் உடல் நசுங்கி பலியாயினர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கடமாக உள்ள சம்பவம் உசிலம்பட்டியை அலற வைத்துள்ளது.
உசிலம்பட்டி அருகிலுள்ள கோடாங்கிநாயக்கன்பட்டியில் இருந்து இன்று மாலை 4 மணி அளவில் ஷேர் ஆட்டோ ஒன்று உசிலம்பட்டிக்குச் சென்றது.

இதே கோடாங்கி நாயக்கன் பட்டியைச் சேர்ந்த வினோத் என்பவர்தான் ஷேர் ஆட்டோவை ஓட்டினார். இந்த ஆட்டோவில் கோடாங்கிநாயக்கன்பட்டி, மற்றும் பக்கத்து ஊரைச் சேர்ந்த 13 பேர் ஏறினர். இவர்கள் எல்லாருமே தீபாவளி பொருட்கள் வாங்க உசிலம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தனர்.
இந்த நேரத்தில்தான், உசிலம்பட்டியில் இருந்து எழுமலை நோக்கி லாரி எதிரே வந்தது. காராம்பட்டி என்ற இடத்தில் ஷேர் ஆட்டோ சென்றபோது, எதிர்பாராதவிதமாக லாரி வந்து பயங்கரமாக மோதியது. இதில் சுக்குநூறாக ஆட்டோ நொறுங்கியது.
இதனால் ஆட்டோவில் இருந்த அசோக், முத்துலட்சுமி, வாசியம்மாள், சத்யா குருவம்மாள், முருகன் ஆகிய 6 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் வசந்தி, அய்யர், நாகஜோதி மற்றும் அவரது மகள்கள் தனுஷாஸ்ரீ 10, சர்மிளா 9, ஆகியோர் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.
உயிருக்கு போராடிய அவர்கள்,உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஐசியூவில் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு இப்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு 3 பேரின் நிலைமையும் கவலைக்கடமாக உள்ளது.
விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் வீரபாண்டியை போலீஸார் கைது செய்தனர். ஷேர் ஆட்டோக்களில் அதிகப்பட்டியான ஆட்களை ஏற்றி செல்வதாக இந்த பகுதியில் ஏற்கனவே பல புகார்கள் எழுந்த நிலையில், 6 பேரின் அநியாய பலி உசிலம்பட்டி மக்களை பெரும் அதிர்ரச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.












Click it and Unblock the Notifications