மிட் நைட்.. திடீரென கடலூர் சிறைக்கு மாற்றப்பட்ட சவுக்கு சங்கர்.. ‘உயிருக்கு அச்சுறுத்தல்?’- பரபரப்பு
மதுரை : சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் கடலூர் சிறைக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், யூடியூபர், அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கருக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்தது.
இதனையடுத்து அவர் உடனடியாக மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், நள்ளிரவில் சவுக்கு சங்கர் மதுரை சிறையில் இருந்து கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சவுக்கு சங்கர்
லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றியவரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் தனது இணையதளத்தில் புலனாய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறார். யூடியூப் சேனல்களுக்கும் பேட்டி அளித்து வந்தார். அரசியல் கட்சிகள், தலைவர்கள், அரசு திட்டங்கள் குறித்து பல்வேறு விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார். நீதிமன்ற தீர்ப்புகள் குறித்தும் சவுக்கு சங்கர் விமர்சனம் செய்தார்.

நீதிமன்ற அவமதிப்பு
உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்தும், நீதிபதிகள் குறித்தும் சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டது தொடர்பாக சவுக்கு சங்கர் மீது தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவு செய்தது. இந்த நடவடிக்கைக்கு பின்னரும், யூடியூப் சேனலில் இந்த விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, கிரிமினல் அவமதிப்பு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

தானே ஆஜரான சவுக்கு சங்கர்
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியிருந்தார். வாதங்கள் முடிவடைந்த பிறகு நேற்று மாலை தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக, சவுக்கு சங்கருக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்தது.

மதுரை சிறையில்
இந்த தீர்ப்பை அடுத்து, சவுக்கு சங்கர் உடனடியாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சவுக்கு சங்கர் நள்ளிரவு நேரத்தில் திடீரென மதுரை சிறையில் இருந்து கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்தத் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.

என்ன காரணம்?
சவுக்கு சங்கர் திடீரென கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டது ஏன் என கேள்விகள் எழுந்தன. நிர்வாக காரணங்கள் மற்றும் சவுக்கு சங்கர் உயிருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் ஆகியவற்றின் காரணமாக சவுக்கு சங்கர் மதுரை சிறையில் இருந்து கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டதாக சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications