இதற்கெல்லாம் நான் தலைவணங்க மாட்டேன்; கைதுக்கு பின்னர் சஞ்சய் ராவத் கர்ஜனை
மும்பை; நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறையினர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சிவசேனா கட்சி எம்.பி சஞ்சய் ராவத்தின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் தொடர் சோதனையை மேற்கொண்டது. இந்நிலையில் அவர் விசாரணைக்காக அமலாக்கத்துறை அதிகாரிகளால் பிணையில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், "நான் தலைவணங்க மாட்டேன். கட்சியிலிருந்து விலகவும் மாட்டேன்" என்று கூறியுள்ளார்.
தொடர் சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், அவரது இல்லத்திற்கு ஏராளமான அமலாக்கத்துறை அதிகாரிகள் குவிந்துள்ளனர். அசம்பாவிதம் ஏற்படுவதைத் தவிர்க்க காவல்துறையினர் அதிக அளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மோசடி புகார்
மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் கோரேகாவ் பகுதியில் உள்ள பத்ரா சால் குடிசை சீரமைப்பு பணிகள் சில காலத்திற்கு மேற்கொள்ளப்பட்டது. அதில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. குடிசைப்பகுதி மக்களுக்கு வீடுகள் கட்ட வேண்டிய ரூ.1,034 கோடி நிலத்தைத் தனியார்த் துறையினருக்கு விற்று மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் சிவசேனா முக்கிய தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் எம்பிக்கு நெருக்கமான தொழிலதிபர் பிரவின் ராவத் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தது.

விசாரணை
அவரிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, சஞ்சய் ராவத் குடும்பத்தினரின் சுமார் ரூ.11 கோடி சொத்துகள் முடக்கப்பட்டன. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ஆஜராக சஞ்சய் ராவத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டது. இருப்பினும், முதல்முறை அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இடையே ஜூலை 1ஆம் தேதி சில மணி நேரம் விசாரணைக்கு ஆஜரானார். அதன் பின்னர் இரு முறை சம்மன் அனுப்பியும் சஞ்சய் ராவத் ஆஜராகவில்லை. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்வதால் தன்னால் நேரில் ஆஜராக முடியவில்லை என்றும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் நேரில் ஆஜராவதாகவும் அவகாசம் கோரி இருந்தார்.

ரெய்டு
இதற்கிடையே இன்று காலை அமலாக்கத் துறையினர் சஞ்சய் ராவத் வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். சஞ்சய் ராவத்திடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பத்ரா சால் மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகாததாலேயே இந்த நடவடிக்கை எடுத்ததாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் இது அரசியல் பழிவாங்கல் காரணமாகப் போடப்பட்ட வழக்கு என சஞ்சய் ராவத் மறுத்துள்ளார்

கைது
இன்று காலை சஞ்சய் ராவத் தனது ட்விட்டரில், "எந்தவொரு ஊழலுக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. சிவசேனா தலைவர் பாலாசாகேப் தாக்கரே மீது ஆணையாக இதை நான் சொல்கிறேன். பாலாசாகேப் எங்களுக்கு போராட கற்றுக் கொடுத்தார். சிவசேனாவுக்காக நான் தொடர்ந்து போராடுவேன். இது பொய்யான குற்றச்சாட்டு.. போலியான ஆதாரம். நான் சிவசேனாவை விட்டு விலக மாட்டேன். என் உயிரே போனாலும் சரணடைய மாட்டேன். ஜெய் மகாராஷ்டிரா" என்று பதிவிட்டு உள்ளார்.
இதனையடுத்து அமலாக்கத்துறையினர் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதன் தொடர்ச்சியாக ராவத்தை கைது செய்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், "தொடர்ந்து இது போல பொய் வழக்குகள் மக்கள் மீது கட்டமைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் சிவசேனாவையும், மகாராஷ்டிரத்தையும் பலவீனப்படுத்தவே செய்யப்படுகின்றன. இதற்கெல்லாம் நான் தலைவணங்கவும், கட்சியை விட்டு விலகவும் மாட்டேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications