ஐஎன்எஸ் வேலா நீர்மூழ்கி கப்பல் சோதனை ஓட்டம்!
மும்பை: பிரான்ஸ் நாட்டின் தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் வேலா என்ற புதிய நீர்மூழ்கி கப்பல் சோதனை ஓட்டம் மும்பையில் துவங்கியது.
இந்திய கடற்படைக்கு வலிமை சேர்க்கும் விதத்தில், 6 புதிய நீர்மூழ்கி கப்பல்களை தயாரிப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நேவல் குரூப் என்ற நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன் இந்த கப்பல்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, 2005ம் ஆண்டு நேவல் குரூப் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. நேவல் குரூப் தொழில்நுட்ப உதவியுடன், மும்பையில் செயல்பட்டு வரும் அரசுக்கு சொந்தமான மசகான் கப்பல் கட்டும் தளத்தில் இந்த 6 நீர்மூழ்கி கப்பல்களின் கட்டுமானப் பணிகள் தொடங்கின.
ஸ்கார்பீன் ரகத்திலான இந்த 6 நீர்மூழ்கி கப்பல்களில் கல்வாரி, கந்தேரி, கரன்ஜ் ஆகிய மூன்று கப்பல்கள் ஏற்கனவே கட்டுமானப் பணிகள் முடிந்து சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதில், கல்வாரி நீர்மூழ்கி கப்பல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக இருந்ததால், 2017ம் ஆண்டு கடற்படையில் சேர்க்கப்பட்டுவிட்டது.
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து.. பகிரங்கமாக கை கோர்க்கின்றனவா திமுக, அமமுக கட்சிகள்?
இந்தநிலையில், ஸ்கார்பீன் ரகத்தில் நான்காவதாக உருவாக்கப்பட்ட ஐஎன்எஸ் வேலா நீர்மூழ்கி கப்பலின் கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்று நேற்று முறைப்படி சோதனை ஓட்டங்கள் துவங்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சியில் மசகான் கப்பல் கட்டும் தளத்தை சேர்ந்த அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பல்வேறு கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்ட பின்னர், ஐஎன்எஸ் வேலா கடற்படையில் இணைக்கப்படும். மேலும், ஸ்கார்பீன் ரகத்தில் ஐந்தாவது நீர்மூழ்கி கப்பலும் விரைவில் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்கார்பீன் ரகத்தில் தயாரிக்கப்படும் இந்த 6 நீர்மூழ்கி கப்பல்களும் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை பெற்றுள்ளன. ரேடார் கண்களில் சிக்காமல் எதிரி நாட்டு எல்லைக்குள் சென்று தாக்குதல் நடத்தும் திறன் பெற்றவை. நீருக்கு அடியிலும், மேற்பரப்பிலும் உள்ள இலக்குகளை ஏவுகணைகளை கொண்டு துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் பெற்றவையாக இருக்கும்.
இந்த புதிய நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலமாக இந்திய கடற்படையின் பலம் வெகுவாக மேம்படும். இந்த கப்பல் கட்டும் பணிகள் இலக்கு வைக்கப்பட்ட காலத்தைவிட நீண்ட கால தாமதத்துடன் நடந்து வருகிறது. இதனை விரைவுப்படுத்தி, மீதமுள்ள இரண்டு நீர்மூழ்கி கப்பல்களையும் விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதுகாப்புத் துறை வல்லுனர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.