காய்கறியில் தான் சத்து இருக்கு! ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு அட்வைஸ் செய்த திமுக எம்.பி.!
நாமக்கல்: காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கிச்சடியில் கேரட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளை மாணவர்கள் ஒதுக்கி வைத்ததை கண்ட திமுக எம்.பி.ராஜேஷ்குமார், அவற்றில் தான் சத்து இருப்பதாகவும், காய்கறிகளை அவசியம் சாப்பிட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.
மேலும், மாணவர்களோடு மாணவராக தானும் ஒரு தட்டில் கிச்சடியும், உப்புமாவும் வாங்கி அதன் தரத்தையும் சுவையையும் ருசித்துப் பார்த்தார்.
ராஜேஷ்குமார் எம்.பி.யுடன் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோரும் மாணவர்களுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டனர்.

காலை உணவுத் திட்டம்
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்படி நாள்தோறும் முதல்கட்டமாக 1 லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. 1,545 பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகள் முதல்கட்டமாக பயனடைய இருக்கிறார்கள். ஒரு குழந்தைக்கு நாள் ஒன்றுக்கு 12 ரூபாய் 75 காசு செலவில் கிச்சடி, ரவா உப்புமா, என தினமும் ஒவ்வொரு வகை சிற்றூண்டிகள் கொடுக்கப்படுகின்றன.

தமிழகம் எங்கும்
தமிழக வரலாற்றில் முதல்வர் ஸ்டாலின் பெயரை என்றும் நிலைத்திருக்கச் செய்யும் வகையில் நேற்று மதுரையில் தொடங்கப்பட்ட இந்த திட்டமானது இன்று தமிழகமெங்கும் தொடங்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. அந்த வகையில் நாமக்கல்லில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் மதிவேந்தனும், திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமாரும் முதல்வர் பாணியில் மாணவர்களோடு மாணவராக தரையில் அமர்ந்து சிற்றூண்டியை சுவைத்தனர்.

காய்கறியில் சத்து
அப்போது தனக்கு நேர் எதிரே அமர்ந்திருந்த குழந்தை, கிச்சடியில் சேர்க்கப்பட்டிருந்த கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகளை தட்டில் ஒதுக்கி வைத்ததை பார்த்த ராஜேஷ்குமார் எம்.பி., காய்கறியில் தான் சத்துக்கள் இருப்பதாகவும் அதனால் அவசியம் காய்கறிகளை ஒதுக்காமல் சாப்பிட வேண்டும் எனவும் அன்பொழுக அறிவுரை வழங்கினார். இதனிடையே தனது அருகில் அமர்ந்திருந்த மற்றொரு குழந்தைக்கு சிற்றூண்டியை ஊட்டிவிட்ட ராஜேஷ்குமார், சுவை எப்படி இருக்கிறது எனவும் வினவினார்.

தரம் முக்கியம்
இதேபோல் அமைச்சர் மதிவேந்தனும் தனது அருகில் அமர்ந்திருந்த குழந்தைக்கு சிற்றூண்டியை ஊட்டி விட்டார். காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்துவிட்டு புறப்படும் முன்பு, மாவட்ட ஆட்சியர் மற்றும் உரிய அதிகாரிகளை அழைத்த ராஜேஷ்குமார் எம்.பி. தொடர்ந்து தரத்தை கண்காணித்து எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என கறாராக உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications