ஆழ்கடலில் ஒரு விசித்திர உயிரினம்.. உடல் முழுவதும் கண்ணாடியை மாதிரி.. என்ன இது? விஞ்ஞானிகள் 'ஷாக்'
நியூயார்க்: கடலின் மிக ஆழமான பகுதியில் வாழக்கூடிய ஒரு விசித்திரமான உயிரினத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
உடல் முழுவதும் கண்ணாடியை போல மிக அழகாக காணப்படும் இந்த உயிரினத்தை கண்டு விஞ்ஞானிகளே வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
மிகக் கொடூரமான மீன்களான சுறா, திமிங்கலம் வாழும் ஆழ் கடலில், அவற்றிடம் இருந்து தப்பித்து வாழ்வதற்காக இந்த உடல் தகவமைப்பை அந்த உயிரினம் பெற்றிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவக்கின்றனர்.

இயற்கையின் அதிசயம் 'கேமோஃப்ளெஜ்'
விலங்குகள், பறவைகளின் உலகம் அலாதியானது மட்டுமின்றி விசித்திரமானதும் கூட. மனிதர்களை போல வீடுகளில் வசிக்க முடியாத விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இயற்கையே தகவமைத்து தந்துள்ள தற்காப்பு அம்சங்கள், உண்மையிலேயே வியப்பை தரக்கூடியவை. இதுபோல்தான், சில உயிரினங்களுக்கு பிரத்யேகமான பாதுகாப்பு அம்சங்களை இயற்கை வழங்கி இருக்கிறது. அந்த அம்சங்களை கொண்ட விலங்குகளும், பறவைகளும் தங்களை அதன் மூலம் தற்காத்துக் கொள்ளும். அதை பயன்படுத்தி வேட்டையாடவும் செய்யும். அது விஷமாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எதிரிகளிடம் இருந்து தன்னை மறைத்துக் கொள்ளக் கூடிய அம்சமாகவும் இருக்கலாம். இப்படிப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுக்கு பெயர்தான் கேமோஃப்ளெஜ் (camouflage). அப்படியொரு உயிரினத்தை தான் ஆராய்ச்சியாளர்கள் கடலில் கண்டறிந்துள்ளனர்.

கண்ணாடி உடல்
அமெரிக்காவைச் சேர்ந்த கடல் ஆராய்ச்சியாளர்கள் சில மாதங்களுக்கு முன்பு ஆழ்கடலுக்குள் சென்று ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு ஆராய்ச்சியாளரின் முகத்தை உரசிக்கொண்டு ஒரு உயிரினம் சென்றது. ஆனால் அடுத்த நொடியே அது மறைந்துவிட்டது. பின்னர் மீண்டும் தென்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் ஒரு சிறிய வலையை பயன்படுத்தி அதை பிடித்துள்ளார். இதை பார்த்த அவர்கள் ஆச்சரியத்தில் உறைந்தனர். ஏனெனில் அதன் உடலே கண்ணாடியை போல இருந்துள்ளது.

மிக அரிய உயிரினம் சிஸ்டிசோமா
பின்னர், இந்த உயிரினத்தின் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. கண்ணாடி போல இருப்பதால், இதன் உடலுக்குள் இருக்கும் பாகங்கள் கூட தெள்ளத்தெளிவாக தெரிகிறது. கழுத்து பகுதியில் ஆரஞ்சு நிறத்தில் தெரிவது அதன் முட்டைகள் இருக்கும் பை ஆகும். இந்த உயிரினத்தை பார்த்த கடல் விஞ்ஞானிகள் இதன் பெயர் 'சிஸ்டிசோமா' என்றும், இது நண்டு, லாப்ஸ்டர் குடும்பத்தைச் சேர்ந்தது எனவும் கூறியுள்ளனர். ஆழ்கடலில் அதாவது 1000 மீட்டர் ஆழத்தில் இவை வாழக்கூடியவை. மிகவும் அரிய வகை உயிரினமாக இது கருதப்படுகிறது.

சுறாக்களுக்கே 'டாடா'
இந்த சிஸ்டிசோமாக்கள் சுறாக்களும், திமிங்கலம் வாழும் பகுதியில் வசிக்கக்கூடியவை. பொதுவாக, சுறாக்கள், திமிங்கலங்கள் இருக்கும் பகுதியில் சிறு உயிரினங்களால் வாழ முடியாது. ஏனெனில், அந்த மீன்களுக்கு இவை இரையாகிவிடும். ஆனால், சிஸ்டிசோமாக்கள் கண்ணாடி போல இருப்பதால், நீருடன் நீராக கலந்து பல நெடுங்காலங்களாக சுறாக்களுக்கும், திமிங்கலங்களுக்கும் இவை 'டிமிக்கி' கொடுத்து வருகின்றன.












Click it and Unblock the Notifications