"நம்பிக்கை துரோகம்!" பீகாரில் திடீரென டென்ஷனான அமித் ஷா..தனியாக களமிறங்கும் பாஜக! ஓர்க் அவுட் ஆகுமா
பாட்னா: பீகாரில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய உள் துறை அமைச்சர் அமித் ஷா, பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை மிகக் கடுமையாகச் சாடி பேசினார்.
பீகாரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பாஜக-ஜேடியு கூட்டணி ஆட்சியை நடந்து வந்தது. நிதிஷ்குமார் மற்றும் பாஜகவுக்கு இடையேயான கருத்து வேறுபாடு அதிகரித்த நிலையில், அவர் கூட்டணியில் இருந்து வெளியேறினார்,
சுமார் 6 ஆண்டுகளுக்குப் பின்னர், அவர் மீண்டும் ஆர்ஜேடி உடன் கை கோர்த்து உள்ளார். இதன் மூலம் பீகாரில் புதிய கூட்டணி அரசு ஆட்சியில் அமர்ந்து உள்ளது. இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது.
வினையான விளையாட்டு! பொம்மை என நினைத்து சரமாரியாக சுட்ட 3 வயது குழந்தை.. துடிதுடித்து பலியான தாய்
பீகார்
நிதிஷ் குமார் கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்னர் முதல்முறையாக பீகாரில் பாஜக சார்பில் 'ஜன் பவ்னா மகாசபா' என்று பெயரில் மிகப் பெரிய பொதுக் கூட்டம் நடைபெற்றது. பீகாரில் 2024 மக்களவை தேர்தலுக்கான பிரசார தொடக்கமாக இது பார்க்கப்படுகிறது. இதில் கலந்து கொள்ள உள் துறை அமைச்சர் அமித் ஷா இரு நாட்கள் பயணமாகப் பீகார் சென்றுள்ளார். இந்தக் கூட்டத்தில் பேசி அமித் ஷா பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை மிகக் கடுமையாகத் தாக்கி பேசினார்.
துரோகம்
பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் அமித் ஷா, "கடந்த பீகார் சட்டசபைத் தேர்தலில் பாஜகவுடன் ஒப்பிடும் போது, பாதி இடங்களில் மட்டுமே மட்டுமே நிதிஷ் குமாரின் கட்சி வெற்றி பெற்று இருந்தது. அப்போதும், பீகாரில் நிதிஷ் குமார் கீழ் கூட்டணி இருக்கும் எனப் பிரதமர் மோடி உறுதி அளித்து இருந்தார். இதன் காரணமாக நிதிஷ் குமாரை முதலமைச்சராகத் தொடர மோடி அனுமதித்தார். பிரதமரின் பெரிய மனது காரணமாகவே இது சாத்தியமானது. ஆனாலும், அவர் எங்களுக்குத் துரோகம் செய்தார்.
மீண்டும் துரோகம் செய்வார்
அவரது பிரதமர் ஆசை அவரை காங்கிரஸ் மற்றும் லாலு பிரசாத் யாதவுடன் கைகோர்க்க வைத்தது. பாஜகவுக்குத் துரோகம் செய்த பிறகு, நிதிஷ்குமார் இப்போது லாலுவின் மடியில் அமர்ந்துள்ளார். ஆனால் லாலுவுக்கு நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நிதீஷ் குமார் உங்களுக்கு மீண்டும் துரோகம் செய்வார்.. தனது பிரதமர் கனவை நிறைவேற்ற அவர் நிச்சயம் காங்கிரஸ் கட்சியுடன் செல்வார். லாலு பிரசாத் இதனால் கவனமாக இருக்க வேண்டும்.
ஒரே குறிக்கோள்
நிதீஷ் குமாருக்கு ஒரே ஒரு குறிக்கோள் தான்.. எப்படியாவது அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பது மட்டுமே அவரது ஒரே குறிக்கோள். ஆனால் அவர் இப்போது பீகார் மக்கள் முன் அம்பலப்பட்டு உள்ளார். மக்களின் ஆதரவு அவருக்கு மீண்டும் கிடைக்காது. ஆனால், சொல்லுங்கள்.. இப்படி நம்பிக்கை துரோகம் செய்யும் ஒருவர் எப்படி பிரதமர் ஆக முடியும்?
மக்களுக்குத் தெரியும்
பீகார் மக்களுக்கு ஒன்று தெரியும்.. அடுத்த தேர்தலில் இங்குத் தாமரை தான் மலரும்..அடுத்து வரும் 2024 மக்களவை தேர்தலில் பீகாரில் நிதிஷ்- லாலு கூட்டணி படுதோல்வி அடையும். அதைத் தொடர்ந்து 2024 தேர்தலில் பீகாரில் பாஜக தனித்து ஆட்சி அமைக்கும். பீகார் மக்களுக்கு நன்றாகவே தெரியும். பீகாருக்காகப் பிரதமர் மோடி விமான நிலையம் தொடங்கிப் பல விஷயங்களைக் கொடுத்து உள்ளார். மொத்தம் 1.35 லட்சம் கோடி பீகார் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால் நிதிஷ்குமார் இங்கு என்ன செய்தார்.
பாஜக
பாஜக மட்டும் ஆட்சிக்கு வந்தால் பீகார் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாகும். நம்பிக்கை துரோகம் செய்த நிதிஷ்குமாருக்கு நிச்சயம் பீகார் மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்" என்று ஆவேசமாகப் பேசினார். இந்தப் பொதுக்கூட்டத்திற்குப் பின்னர், அங்குள்ள முக்கிய பாஜக நிர்வாகிகளையும் நேரில் சந்தித்து அமித் ஷா ஆலோசனை நடத்துகிறார். வரும் தேர்தலில் அங்கு பாஜக தனித்து களமிறங்கும் நிலையில், கட்சியை வலுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து அமித் ஷா விவாதிக்கிறார்.