பீகாரில் பாஜகவுக்கு 2 துணை முதலமைச்சர்கள்...? வேறு வழியின்றி ஏற்க வேண்டிய கட்டாயத்தில் நிதிஷ்..!
பாட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தலில் நூலிழையில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் இந்த முறை 2 துணை முதலமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக 74 இடங்களிலும் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களை கைப்பற்றியுள்ளது. இது பெரும்பான்மைக்கு தேவையான 122 இடங்களில் இருந்து மூன்று இடங்கள் மட்டுமே கூடுதலாக பெற்றுள்ளது.
இதனால் நிதிஷ்குமாரின் அரசு மைனாரிட்டி அரசாக தான் கருதப்படும். இந்நிலையில் பாஜக கூடுதல் இடங்களில் வென்றுள்ள போதும் ஏற்கனவே போட்டுள்ள ஒப்பந்தப்படி நிதிஷ்குமாரே முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் அதே வேளையில் இந்த முறை பாஜகவுக்கு 2 துணை முதலமைச்சர்கள் வழங்கப்படும் எனத் தெரிகிறது.
அந்த வகையில் ரேனு தேவி மற்றும் தர்கிஷோர் பிரசாத் ஆகிய இருவரும் துணை முதல்வர்களாக வர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. பாஜக தரப்பின் இந்த கோரிக்கையை நிதிஷ்குமாரும் ஏற்றுக்கொண்டதாகவே தெரிகிறது. காரணம், அவருக்கு ஆட்சியை தக்க வைக்க வேறு வழியில்லை என்பதேயாகும்.
35 ஆண்டுகளாக சட்டசபை தேர்தலில் போட்டியிடாமல் 4-வது முறை பீகார் முதல்வராக பதவியேற்கும் நிதிஷ்குமார்
பாஜகவுக்கு இரண்டு துணை முதலமைச்சர்கள் கிடைப்பதன் மூலம் காலப்போக்கில் நிதிஷ்குமாருக்கான அதிகாரம் டம்மியாகவும் அதிகம் வாய்ப்புள்ளது. பாஜகவின் இரட்டை துணை முதலமைச்சர் கோரிக்கைக்கு ஐக்கிய ஜனதா தளம் தலைவர்கள் ஆட்சேபனை தெரிவித்த போதும் அதனை ஒப்புக் கொள்ளும் மனநிலைக்கு வந்துவிட்டார் நிதிஷ்குமார்.
இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்பதை போல் பாஜக நினைத்தது பீகாரில் அரங்கேறியுள்ளது. அதே உற்சாகத்தில் கேரளா, மேற்கு வங்கம், தமிழகம் ஆகிய மூன்று மாநில சட்டமன்றத் தேர்தல்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது பாஜக மேலிடம்.