2024-ல் பாஜகவுக்கு 50 இடங்கள்தான் கிடைக்கும்.. எல்.ஏ.க்களை தூக்கிய பாஜகவுக்கு நிதிஷ்குமார் சாபம்!
பாட்னா: 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மொத்தம் 50 இடங்கள்தான் கிடைக்கும் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீண்டகாலம் நிதிஷ்குமாரின் ஜேடியூவும் இடம் பெற்றிருந்தது. பீகாரில் ஜேடியூ-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்றும் வந்தது. பாஜகவின் கூட்டணியில் இருந்த போதே 2020-ம் ஆண்டு ஜேடியூவின் அருணாச்சல பிரதேச எம்.எல்.ஏக்களைக் கூண்டோடு அள்ளியது பாஜக. அருணாச்சல பிரதேசத்தில் மொத்தம் 7 ஜேடியூ எம்.எல்.ஏக்களில் 6 பேரை பாஜக வளைத்தது. இதனால் ஜேடியூ அதிர்ச்சி அடைந்தாலும் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தது.
மணிப்பூரில் காலியான கட்சி! விரக்தியின் உச்சத்தில் நிதிஷ்குமார்! பாஜகவை வீழ்த்த கொடுத்த நறுக் அட்வைஸ்
கூட்டணிக்கு குட்பை
பீகாரில் கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது சபாநாயகர், அமைச்சர்கள், முதல்வராக இருந்த நிதிஷ்குமாரை விமர்சிக்கவும் தயங்கவில்லை. பாஜகவின் கொல்லைப்புற கூட்டணி கட்சியான லோக் ஜனசக்தியும் கடுமையாக நிதிஷ்குமாரை விமர்சித்தது. இதனால் பொறுமை இழந்த நிதிஷ்குமார் பாஜகவுடனான கூட்டணிக்கு குட்பை சொன்னார்.
தேசிய அரசியலில் நிதிஷ்
பீகாரில் தற்போது ஆர்ஜேடி, காங்கிரஸுடன் இணைந்து ஜேடியூ புதிய கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. மேலும் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து நிதிஷ்குமாரை 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கக் கூடும் எனவும் கூறப்பட்டு வருகிறது. அண்மையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், நிதிஷ்குமாரை சந்தித்துப் பேசினார்.
நிதிஷ் டெல்லி பயணம்
இதனிடையே நிதிஷ்குமார்தான் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் என்பதை சூசகமாக தெரிவிக்கும் வகையிலான பிரம்மாண்டமான பதாகைகள் பாட்னாவில் வைக்கப்பட்ட்டுள்ளன. இந்த பின்னணியில் நிதிஷ்குமார் டெல்லி பயணம் மேற்கொள்கிறார். டெல்லிக்கு நாளை வரும் நிதிஷ்குமார் 3 நாட்கள் முகாமிடுகிறார். இந்த பயணத்தின் போது எதிர்க்கட்சிகளின் தலைவர்களை ஒருங்கிணைக்கும் பணியை நிதிஷ்குமார் மேற்கொள்ள இருக்கிறார்.
50 சீட் தாண்டாது
தமது டெல்லி பயணம் தொடர்பாக கருத்து தெரிவித்த நிதிஷ்குமார், 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும். நாட்டின் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து பாஜகவை எதிர்த்தால் அந்த கட்சியால் 50 இடங்களைக் கூட தாண்ட முடியாத நிலை வரும். தேர்தல் கால ஆதாயங்களுக்காக மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பது பாஜகவின் சதித் திட்டம். இதனை எதிர்க்கட்சிகள் இணைந்து முறியடிப்போம் என்றார்.
மணிப்பூர் விவகாரம்
மேலும் ஜேடியூவின் லல்லன் சிங் கூறுகையில், பாஜகவுக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளையும் நாங்கள் ஒருங்கிணைக்கிறோம். எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது பற்றி இப்போதைக்கு நாங்கள் யாரையும் முன்னிறுத்தவும் இல்லை. மணிப்பூரில் எங்கள் கட்சி எம்.எல்.ஏக்களை பாஜக விலைக்கு வாங்கலாம். ஆனால் ஜேடியூவுக்கான மக்களின் ஆதரவை பாஜகவால் அசைக்கவே முடியாது என்றார்.