லாலுவின் ஆர்ஜேடி, நிதிஷின் ஜேடியூ கட்சிகள் ஒரே கட்சியாக இணைகின்றனவா? பீகாரில் பரபரப்பு!
பாட்னா: பீகாரில் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ), துணை முதல்வர் தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) ஆகிய கட்சிகள் ஒரே கட்சியாக இணையப் போவதாக அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. ஆனால் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
Recommended Video
1970களில் பீகார் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் பெரும் கிளர்ச்சியாக வெடித்தது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்தியாவில் காங்கிரஸுக்கு மாற்றாக ஒரு அரசியல் சக்தியை உருவாக்க முடியும் என அப்போதைய ஜனதா கட்சி நிரூபித்தது.
சுமார் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் பீகாரில் அப்படி ஒரு திருப்பம் நிகழ்ந்துள்ளது. பீகாரின் இரு பெரும் பிரதான கட்சிகளான ஜேடியூ, ஆர்ஜேடி இணைந்து புதிய ஆட்சி அமைத்துள்ளன. பாஜகவுடனான கூட்டணியை ஜேடியூ முறித்துக் கொண்டதைத் தொடர்ந்து அக்கட்சிக்கு ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதரவு தந்தனர்.
இதனால் பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் புதிய கூட்டணி ஆட்சி பதவியேற்றது. பீகார் முதல்வராக நிதிஷ்குமாரும் துணை முதல்வராக தேஜஸ்வி யாதவும் பதவியேற்றனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர்களும் பதவியேற்றனர். அமைச்சரவை ஒதுக்கீட்டில் சில ஜேடியூ எம்.எல்.ஏக்களுக்கு அதிருப்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பீகார் சட்டசபையில் ஆக.24-ல் முதல்வர் நிதிஷ்குமார் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு
இந்நிலையில்தான் ஜேடியூவில் இருந்து தூக்கி அடிக்கப்பட்ட மாஜி மத்திய அமைச்சர் ஆர்.சி.பி.சிங், ஆர்ஜேடியும் ஜேடியூம் ஒரே கட்சியாக இணையப் போகின்றன. இன்னும் எத்தனை முறைதான் நிதிஷ்குமார் கூட்டணி மாறுவாராம்? ஏற்கனவே 4 முறை கூட்டணி மாறிவிட்டார். 1994, 2013, 2017 மற்றும் 2022-ல் நிதிஷ்குமார் கூட்டணி மாறிவிட்டார். என்னைப் பொறுத்தவரையில் ஜேடியூ ஒரு மூழ்கும் கப்பல். ஆர்ஜேடியும் ஜேடியூம் ஒரே கட்சிகளாக இணைந்துவிடும் என்றார்.
ஆனால் இதனை முதல்வர் நிதிஷ்குமார் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் நிதிஷ்குமார் கூறுகையில், இப்படியான பேச்சுகளை எல்லாம் கண்டு கொள்ளாதீர்கள்.. கடந்து போவோம் என்றார். ஆனால் ஆர்ஜேடி- ஜேடியூ இரு கட்சிகளும் மீண்டும் கூட்டணி அமைத்த போதே தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைக்க ஜனதா தளத்தில் இருந்து பிரிந்த கட்சிகள் அனைத்தும் ஒரே கட்சியாக வேண்டும் என்ற குரல் வலுத்தது குறிப்பிடத்தக்கது