இனி "நோ" அரசியல் ஆலோசனை! தடாலடியாக அறிவித்த பிரசாந்த் கிஷோர்.. களமிறக்கப்படும் "மெகா" பிளான்!
பாட்னா: இனி அரசியல் கட்சிகளுக்காக தான் பணியாற்றப் போவதில்லை என்று பிரபல தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகள் பலவும் பிரசாந்த் கிஷோரை நம்பியிருக்கும் வேளையில், இவரது இந்த அறிவிப்பு அக்கட்சிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
பல முக்கியக் கட்சிகளில் பெரிய பதவிகளில் சேர முயற்சித்த போதிலும், அது கைகூடாதததால் பிரசாந்த் கிஷோர் விரக்தியில் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
3 நாள்.. 75 கி.மீ நடைபயணம் தொடங்கும் தமிழக காங்கிரஸ்! அரசியல் சாசனம் காக்க.. கேஎஸ் அழகிரி அறிவிப்பு!
டிஜிட்டல் அரசியலின் வித்தகர்...
பழமையான பாணியில் நடைபெற்று வந்த இந்திய அரசியலை டிஜிட்டல் யுகத்துக்கு அறிமுகப்படுத்தியவர் பிரசாந்த் கிஷோர் என தாராளமாக சொல்ல முடியும். தேர்தல் வியூகராக பிரசாந்த் கிஷோர் அவதாரம் எடுத்த பிறகுதான், பல அரசியல் கட்சிகள் தங்கள் வியூகத்தை மாற்றியமைத்தன. முக்கியமாக, புதிய வாக்காளர்களான இளம் தலைமுறையினரை கவரும் உத்தியை அரசியல் கட்சிகளுக்கு சொல்லிக் கொடுத்தார் பிரசாந்த் கிஷோர்.
இறங்கி அடித்த ஐ-பேக்
'ஐ-பேக்' என்ற நிறுவனத்தை தொடங்கி பல முக்கிய அரசியல் கட்சிகளுக்காக பிரசாந்த் கிஷோர் பணியாற்றினார். பாஜக, திரிணமூல் காங்கிரஸ், திமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் என பல அரசியல் கட்சிகள் ஆளுங்கட்சிகளாக மாறுவதற்கு திரைமறைவில் வேலை செய்தவர் பிரசாந்த் கிஷோர். ஒருகட்டத்தில், பிரசாந்த் கிஷோர் எந்தக் கட்சிக்கு வேலை செய்கிறாரோ அந்தக் கட்சி நிச்சயம் வெற்றி பெறும் என்ற பிம்பமே உருவாகிவிட்டது.
வேண்டாத அரசியல் ஆர்வம்..
இவ்வாறு வீழ்த்த முடியாத தேர்தல் வியூகராக மாறிய பிரசாந்த் கிஷோருக்கு அரசியல் ஆர்வம் ஏற்பட்டது. இதனால் தனது சொந்த மாநிலமான பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளக் கட்சியில் அவர் இணைந்தார். பிரசாந்த் கிஷோரை கவுரவிக்கும் பொருட்டு, அவருக்கு தேசியத் துணைத் தலைவர் பதவியை வழங்கினார் நிதிஷ் குமார். ஆனால், ஒருசில மாதங்களிலேயே நிதீஷ் குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து விலகினார்.
காங்கிரஸிலும் சேர முடியவில்லை..
பின்னர், காங்கிரஸில் சேரும் முயற்சிகளை பிரசாந்த் கிஷோர் மேற்கொண்டார். இதற்காக ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களை சில மாதங்களுக்கு முன்பு நேரடியாக பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசினார். காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர் இணைவது ஏறக்குறைய உறுதியாகி விட்டதாக ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. ஆனால், காங்கிரஸில் சேரும் முடிவை பிரசாந்த் கிஷோர் கைவிட்டார். அவர் கேட்ட பதவி கொடுக்கப்படாததால் காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர் சேரவில்லை எனக் கூறப்பட்டது.
"இனி என் அரசியல் பாதை..."
இந்நிலையில், தனது அரசியல் நிலைப்பாட்டை பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார். இதுகுறித்து பீகார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இனி எந்தவொரு அரசியல் கட்சிக்காகவும் பணியாற்ற மாட்டேன். இந்த முடிவில் உறுதியாக இருக்கிறேன். முதலில் எனது சொந்த மாநிலமான பீகாரில் நடைமுறையில் இருக்கும் அமைப்பை (சிஸ்டம்) மாற்ற திட்டமிட்டுள்ளேன். மக்களை சந்தித்து பேச விரைவில் 3,000 கீ.மீ நடைபயணம் மேற்கொள்வேன்" என பிரசாந்த கிஷோர் கூறினார்.
முன்னதாக, ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த பிரசாந்த் கிஷோர், "இந்த ஆண்டு இறுதியில் குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு ராகுல் காந்தி பாதயாத்திரை சென்றிருக்க வேண்டும். இல்லையெனில், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் அவர் பாதயாத்திரை சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்" என்றார்.