புதுச்சேரி ரெங்கசாமிக்கு வந்த சோதனை! போர்கொடி தூக்கிய ‘சுயேட்சை’ எம்.எல்.ஏ.! இது தான் அதற்கு காரணமா?
புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமிக்கு எதிராக பாஜக-வுக்கு ஆதரவு அளித்து வரும் சுயேட்சை எம்.எல்.ஏ. அங்காளன், திடீரென போர்க்கொடி தூக்கியுள்ளார். முதலமைச்சரை பதவி நீக்க வேண்டும் என, சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பாஜக மற்றும் என்.ஆர். காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ரெங்கசாமி பதவி வகித்து வருகிறார்.
புதுச்சேரி திருபுவனை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அங்காளன். பாஜக - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவளித்து வருகிறார்.

சுயேட்சை எம்.எல்.ஏ. புகார்
இந்நிலையில், சுயேட்சை எம்.எல்.ஏ. அங்காளன் வெற்றிபெற்ற சட்டமன்றத் தொகுதியில், பல்வேறு நலத்திட்டப் பணிகள், அரசால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், எம்.எல்.ஏ. அங்காளன் வெளிப்படையாகவே கூறை கூறியிருந்தார். ஆனாலும், இதுவரை திருபுவனை தொகுதியில் எந்த ஒரு நலத்திட்ட பணிகளும் அரசு சார்பில் செயல்படுத்தப்படவில்லை என கூறப்படுகிறது.

திடீர் தர்ணா போராட்டம்
இதனால் அதிருப்தி அடைந்த சுயேட்சை எம்.எல்.ஏ. அங்காளன், இன்று தனது ஆதரவாளர்களுடன், புதுச்சேரி சட்டசபைக்குச் செல்லும் படிக்கட்டில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் தன்னையும், தனது தொகுதியையும் தொடர்ந்து புறக்கணக்கிறார். பாஜக-வுக்கு ஆதரவு அளிப்பதால், தனது தொகுதியில், தான் பரிந்துரைத்த எந்தப் பணிகளையும் ஏற்காமல் இருக்கிறார். பாஜக ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிக்கு எந்த ஒரு திட்டங்களையும் செயல்படுத்தக்கூடாது என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ரெங்கசாமி வாய்மொழி உத்தரவிட்டிருப்பதாகவும் சுயேட்சை எம்.எல்.ஏ. அங்காளன் குற்றம்சாட்டினார்.

முதலமைச்சர் மீது புகார்
புதுச்சேரியில் மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கியது, மதுபான மற்றும் சாராயக்கடைகளுக்கு ஏலம் விட்டதில் ஊழல் மற்றும் முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். புதுச்சேரியில் பாஜகவின் ஆதரவோடு ஆட்சி நடத்தும் முதலமைச்சர் ரெங்கசாமி, பாஜகவை புதுச்சேரியில் வளர விடாமல் தடுக்க நினைக்கிறார். முதலமைச்சர் ரெங்கசாமியை பதவியில் இருந்து நீக்க வேண்டும். இதுதொடர்பாக விரைவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து, முதலமைச்சர் ரெங்கசாமி மீது புகார் அளிக்க உள்ளதாகவும் சுயேட்சை எம்.எல்.ஏ. அங்காளன் தெரிவித்துள்ளார்.

பாஜக எம்.எல்.ஏ. ஆதரவு
இதனிடையே, சுயேட்சை எம்.எல்.ஏ. அங்காளனுக்கு ஆதரவு தெரிவித்து, பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாண சுந்தரம், தர்ணா போராட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், எம்.எல்.ஏ. அங்காளனின் கோரிக்கை நியாயமானது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரின் கோரிக்கைகள் நிராரிக்கப்பட்டதால், சட்டமன்ற வளாகத்தில் எம்.எல்.ஏ. அங்காளன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவரது கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாண சுந்தரம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications