"இனியும் பொறுக்க முடியாது..” கண்ணசைத்த ஸ்டாலின் - மீண்டும் எதிர்ப்பு போராட்டம்.. ரெடியான புதுச்சேரி!
புதுச்சேரி: ஜிப்மரில் இந்தி கட்டாயம் என்ற இயக்குநரின் உத்தரவை எதிர்த்து தி.மு.க நாளை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக புதுச்சேரி மாநில தி.மு.க அறிவித்துள்ளது.
மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி மொழியை கட்டாயமாக்கும் வகையில் அதன் இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்தி திணிப்பை கைவிட வேண்டும், ஜிப்மர் பணியிடங்களில் புதுச்சேரியைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை தி.மு.க சார்பில் ஆர்ப்பாடம் நடைபெற உள்ளது.
புதுவை ஜிப்மர் விவகாரம்-மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி திணிப்பை கைவிட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஜிப்மரில் இந்தி
புதுச்சேரியில் செயல்படும் ஜிப்மர் (ஹவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்) மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி மொழியை கட்டாயமாக்கும் வகையில் ஜிப்மர் இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிகளில் பயன்படுத்தப்படும் அனைத்து அலுவலக பதிவேடுகள், பணியாளர் புத்தகம், பணியாளர் பதிவுகள் அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் மட்டுமே இருக்க வேண்டும். எதிர்காலத்தில் இவை அனைத்தும் இந்தி மொழியில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தி திணிப்பு சர்ச்சை
ஜிப்மர் இயக்குநரின் இந்த உத்தரவு கடும் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது. தி.மு.க எம்.பி கனிமொழி, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ எம்.பி உள்ளிட்ட பலர், ஜிப்மரின் இந்தி திணிப்பு முயற்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மோடி அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கையின் ஒருபகுதி தான் இது என்றும் இதனை அனைத்து தரப்பினரும் ஒன்றாக இணைந்து எதிர்க்க வேண்டும் என்றும் சமூக வலைதளத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மீண்டும் மீண்டுமா?
பா.ஜ.க அரசு மீண்டும் மீண்டும் இந்தி திணிப்பு முயற்சிகளை பல்வேறு வடிவிலும் மேற்கொண்டு வருவதால், இதற்கு எதிராக பெரும் போராட்டம் ஒன்றை நடத்த தி.மு.க தலைமை உத்தரவிட்டுள்ளது. அதன்படி நாளை புதுச்சேரியில் போராட்டம் நடைபெற உள்ளது.
புதுச்சேரி மாநில தி.மு.க அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தொடர்ந்து மாநில உரிமைகளைப் பறித்து வருகிறது. புதுச்சேரி நிலப்பரப்பில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் புதுச்சேரி இளைஞர்கள் வேலை வாய்ப்பில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.
மருத்துவர், செவிலியர், அலுவலக அதிகாரிகள் பணியிடங்கள் முற்றிலும் வெளிமாநிலத்தவர்களுக்கு நிரந்தர அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. துப்புரவுப் பணிகள் மட்டுமே புதுச்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படுகின்றது.
தலைவிரித்தாடும் லஞ்சம்
குறிப்பிட்ட ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றினால் ஒப்பந்த ஊழியர்களும் பணிநிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்பதால் பணியாளர்களை வழங்கும் ஒப்பந்த நிறுவனங்களின் பெயர்களை மாற்றி விடுகின்றனர். இதை யாரேனும் தட்டிக் கேட்டால் அந்த ஊழியர்களையும், அவர்களுக்கு ஆதரவானவர்களையும் பணி வழங்காமல் நீக்கி விடுகின்றனர்.
மேலும் ஒப்பந்த பணிக்கே பல லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டுதான் ஒப்பந்த நிறுவனங்கள் வேலை வழங்குகின்றன. இதுபற்றி ஜிப்மர் அதிகாரிகள் தெரிந்தும், தெரியாததைப்போல் உள்ளனர்.
கீழ்த்தரமான அரசியல்
இவ்வாறு பல வகையில் அடக்குமுறைகளை கையாண்டு வரும் ஜிப்மர் அடுத்தக்கட்டமாக இந்தி மொழியை திணிக்கத் தொடங்கியுள்ளனர். அதாவது ஜிப்மர் இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 'மத்திய அரசுத் துறை மற்றும் நிறுவனங்களில் இந்தி மற்றும் ஆங்கிலம் அலுவலக மொழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது, எதிர்காலத்தில் இந்தி மொழியில் மட்டுமே அனைத்தும் பயன்படுத்த வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.
இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தரமான சிகிச்சை அளிப்பதில் புகழ் பெற்று இருந்த ஜிப்மர் நிர்வாகம் தற்போது கீழ்த்தரமான அரசியல் செய்து வருகிறது. இந்தி திணிப்பு என்பது தரமான சிகிச்சையை கேள்விக்குறியாக்கும்.
திமுக போராட்டம்
எனவே இந்தி திணிப்பை கைவிட வேண்டும், புதுச்சேரி மக்கள் புறக்கணிக்கப்படாமல் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டத்தில் தரமான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும், அனைத்து மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களையும் நோயாளிகளுக்கு வழங்க வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் அனைத்து பணியாளர்களையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும், ஜிப்மரில் உள்ள மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களிலும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மே 9ஆம் தேதி திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் ஜிப்மர் எதிரில் தி.மு.க மாநில கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என அறிவித்துள்ளார்.