பெகாசஸ் விவகாரம்..செல்போன்களை ஒட்டுக்கேட்டு ஆட்சிகவிழ்ப்பு நடக்கிறது.. நாராயணசாமி பரபர குற்றச்சாட்டு
புதுச்சேரி: பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் செல்போன்களை ஒட்டுக்கேட்டுப் பல மாநிலங்களில் ஆட்சி கவிழ்ப்பு நடந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி, புதுவை ஆட்சி கவிழ்ப்பின் சமயத்தில் தன்னுடைய செல்போனும் ஒட்டுக்கேட்கப்பட்டிருக்கலாம் என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
பெகாசஸ் விவகாரம் இந்தியாவில் இப்போது பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த பெகாசஸ் ஸ்பைவேரை கொண்டு ஒருவரது மொபைலை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியும்.
இந்த பெகாசஸ் ஸ்பைவேரை பயன்படுத்தி இந்தியாவில் காங்கிரஸின் ராகுல் காந்தி, தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், திரிணாமுல் முக்கிய தலைவர்கள், 40 செய்தியாளர்கள் எனப் பலரது மொபைல் போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெகாசஸ் ஸ்பைவேர்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் "நமது நாட்டில் தற்போது செல்போன் ஒட்டுக் கேட்பு சம்பவம் பூதாகரமாக வெடித்துள்ளது. இஸ்ரேல் என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் மென்பொருள் மூலம் பலரது செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, முன்னாள் சிபிஐ இயக்குநர் உட்பட பலரும் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது.
ரகசியங்கள்
தனியார் நிறுவனங்கள் யாருக்கும் இந்த பெகாசஸ் மென்பொருளை வழங்க மாட்டோம் என அந்த என்எஸ்ஓ நிறுவனம் தெரிவித்துள்ளது. அரசு அல்லது அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த மென்பொருள் வழங்கப்படுகிறது. இந்தியாவில் மிகப் பெரிய விலை கொடுத்து இந்த மென்பொருளை வாங்கி அனைவரின் செல்போனையும் ஒட்டுக்கேட்டுள்ளனர். பலரது ரகசியங்களைத் தெரிந்துகொள்ள இந்த மென்பொருளைப் பயன்படுத்தியுள்ளனர்.
ஆட்சி கவிழ்ப்பு
இது மிகப்பெரிய ஊழல். மோடி அரசு இதைப் பயன்படுத்தி பல்வேறு மாநிலங்களில் ஆட்சிகளைக் கவிழ்த்துள்ளது. கர்நாடகாவில் கடந்த 2019ஆம் ஆண்டு ஆட்சி கவிழ்க்கப்படுவதற்கு முன் அங்குள்ள முக்கிய தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது. என்னுடைய செல்போனையும் அவர்கள் ஒட்டுக் கேட்டிருப்பார்கள் என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. பல முறை நான் போனில் பேசும்போது, அதற்கான சமிக்ஞைகளும் தெரிந்தது.
|
விசாரணை தேவை
இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற நிலைக்குழு மூலம் உரிய விசாரணை நடத்தப்பட்டால் மட்டுமே பல உண்மைகள் தெரிய வரும். இதைத்தான் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் மோடி அரசு இது பற்றி விசாரணை நடத்தத் தயாராக இல்லை" என்றார். மேலும் பல மாதங்களாகத் தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று விவசாய சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், கொரோனா 3ஆவது அலையைச் சமாளிக்க ஏதுவாக குழந்தைகளுக்கு எனத் தனியாக வார்டு அமைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.