மே கடைசி வரைக்கும் ஊரடங்கு தொடர வாய்ப்பு.. புதுவை அமைச்சர் மல்லாடி தகவல்!
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் மே மாதம் இறுதி வரை ஊரடங்கு தொடர வாய்ப்புள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், புதுச்சேரியில் 3 பேரும், மாஹே பிறந்த ஒருவரும், கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சார்ந்த 3 பேர் என மொத்தம் 7 பேர் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு, ஜிப்மர் மற்றும் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று இல்லாத பகுதியாக காரைக்கால் மற்றும் ஏனாயம் பிராந்தியம் உள்ளது. இந்த பகுதி பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவின்படி அமைச்சரவை கூடி புதுச்சேரியில் மேலும் சில பகுதிகள் பச்சை, ஆரஞ்சு மண்டலமாக பிரிக்கப்படும். மேலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க புதுச்சேரி மாநிலத்தில் மே மாதம் இறுதி வரை கூட ஊரடங்கு தொடர வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.

அமைச்சரை தொடர்ந்து பேசிய சுகாதாரத்துறை இயக்குநர் மோகன் குமார், புதுச்சேரியில் ஊரடங்கு தளர்வுக்கு வாய்ப்பு இருந்தாலும், மக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருந்து, சமூதாய இடைவெளியை கடைபிடித்து, முகக்கவசம் அணிய வேண்டும். புதுச்சேரியில் அரசு ஊழியர்கள் உட்பட 66 ஆயிரம் பேர் இதுவரை AAROGYA SETU செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். அதேபோல் மற்ற அனைவரும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications