சேலம் அரசு மருத்துவமனையின் அவலம்.. படுக்கைகள் நிரம்பின.. தரையில் படுத்து சிகிச்சை பெறும் நோயாளிகள்!
சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் ஆக்சிஜன் சிலிண்டருடன் தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ள அவலநிலை நீடிக்கிறது.
தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு காரணமாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. தினமும் 30,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது 28,000-க்கும் கீழ் குறைந்துள்ளது.
சென்னையில் கொரோனா குறைந்து விட்டபோதிலும், கோவை, சேலம், திருப்பூர் போன்ற மேற்கு மண்டலங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

சேலத்தில் பாதிப்பு அதிகம்
மேற்கு மண்டலங்களில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு அங்கு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. சேலம் மாவட்டத்தில் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கடந்த சில தினங்களாகவே ஆயிரத்தை கடந்து வருகிறது. அங்குள்ள அரசு மற்றும் தனியார் மருத்துமனையில் பெரும்பாலான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

படுக்கை வசதி இல்லை
இந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் அங்குள்ள படுக்கைகள் அனைத்தும் நிரம்பி விட்டன. இதனால் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டோருக்கு தரையில் அமர வைத்து சிகிச்சை அளிக்கப்படும் அவல நிலை இருக்கிறது. நோயாளிகள் பலர் ஆக்சிஜன் வசதியுடன் தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ள வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

உறவினர்கள் குற்றச்சாட்டு
நோயாளிகள் அதிக அளவில் மருத்துவமனையிலிருந்து வீடுகளுக்கும், வீடுகளில் இருந்து மருத்துவமனைக்கும் வருவதனால் அந்த பகுதிகளில் நோய்த்தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், உரிய வசதிகள் இருந்தால் தங்கள் இல்லங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது என்றும் நோயாளிகளின் உறவினர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்

நோய் பரவும் அபாயம்
அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டு சேலம் மாவட்டத்தில் அதிக அளவில் படுக்கை வசதி உள்ளது என்று கூறிய நிலையில் ஒரே படுக்கையில் 3 நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வரும் அவல நிலை அரங்கேறி உள்ளதாக நோயாளிகள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் வார்டில் நூற்றுக்கணக்கான நபர்கள் தேவையில்லாமல் குவிந்து நின்று வருவதால் அவர்கள் மூலம் நோய்த்தொற்று மேலும் சேலம் மாவட்டத்தில் பல மடங்கு உயரும் அபாயம் உருவாகியுள்ளதாகவும் அவர்கள் கூறினார்கள்.












Click it and Unblock the Notifications