சசிகலா ஊழல் சாம்ராஜ்யத்தின் ராணி'.. எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நிறைவேறிய தீர்மானம்
சேலம்: அ.தி.மு.க சார்பில் மாவட்டம்தோறும் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிவருகின்றனர். அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட கூட்டத்தில், சசிகலா ஊழல் சாம்ராஜ்யத்தின் ராணி' என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் அதிமுக மற்றும் அமமுக தொண்டர்களிடம் சசிகலா போனில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். அதிமுகவினர் சசிகலா பேசவில்லை என்றும் அமமுகவினருடன் மட்டுமே பேசிவருவதாகவும் அதிமுக முதலில் கூறியது. ஆனால் அதிமுகவினருடன் சசிகலா தொடர்ந்து பேசிவருவது பின்னாளில் தெரியவந்தது.
இதையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் சசிகலாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் சசிகலா உடன் பேசியதாக முன்னாள் அமைச்சர்கள் உள்பட 17 பேர் ஒரே நாளில் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். ஆனால் அசராத சசிகலா தொடர்ந்து தொண்டர்களிடம் பேசி பதிலடி கொடுத்து வருகிறார்.
சாதிய உணர்வை தூண்டி கட்சியை அபகரிக்க வஞ்சக வலை விரிக்கும் சசிகலா - அதிமுகவில் அதிரடி தீர்மானம்
அதிமுக தீர்மானம்
இதையடுத்து தமிழகம் முழுவதும் அதிமுக மாவட்ட கூட்டங்களை கூட்டி சசிகலாவிற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி சேலம் புறநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நேற்று ஓமலூர் கசி அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்தார். இதில் மாநில அமைப்பு செயலாளர் செம்மலை, ஜெ. பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோவன் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் பங்ககேற்றார்கள்.
தீர்மானம்
இந்த கூட்டத்தில் சசிகிலாவிற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொண்டர்களின் உழைப்பை சுரண்டும் ஒட்டுண்ணிகளாகவும், நற்பெயரை அழிக்கும் நச்சுக்களைகளாகவும் தங்களை வளப்படுத்திக் கொண்ட ஒரே குடும்பத்தினர் மீண்டும் அதிமுகவை அபகரித்துவிடலாம் என்று வஞ்சக வலை விரிக்கின்றனர். மகத்தான தலைவர்களால் புகழ்பெற்றுள்ள அதிமுக ஒரு குடும்பத்தின் அபிலாஷைகளுக்காக ஒரு போதும் தன்னை அழித்துக் கொள்ளாது என்று நினைவுபடுத்துகிறோம். சசிகலவிடம் தொலைப்பேசியில் உரையாடி கட்சியின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தியவர்கள் உடனடியாக நீக்கப்பட்டுள்ளனர்.கட்சி தலைமை மீது சேற்றை வாரிபூசி, தவறான பேட்டி அளித்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
சசிகலாவுக்கு எதிரானது
இதேபோல் நாட்டு மக்களின் வரிப்பணத்தை நயவஞ்சமாகக் கொள்ளைக் கூட்டம்போல் கூட்டுச் சேர்ந்து சதி செய்து, கொள்ளையடித்ததால் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு நான்கு ஆண்டுக்காலம் சிறையில் கம்பி எண்ணிவிட்டு, இப்போது வந்து கழகத்தைக் களங்கப்படுத்த நினைக்கும் சசிகலாவைக் கண்டிக்கிறோம்' என்றும் '' அதிமுக-வை அபகரிக்கும் கொள்ளைக்காரி, ஊழல் சாம்ராஜ்யத்தின் ராணி" போன்ற வார்த்தைகளும் தீர்மானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சிறைக்கு போக காரணம்
இதனிடையே விழுப்புரம் அ.தி.மு.க மாவட்ட கழகம் சார்பாக, நேற்று சசிகலாவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விழுப்புரம் அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசும் போது, ஆடுன காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது. மீண்டும் இந்த இயக்கத்தை எப்படியாவது அபகரித்து, கொள்ளையடிக்கலாம் என்று திட்டம் போடும் சசிகலாவுக்கும் அவரது குடும்பத்துக்கும் எந்தக் காலத்திலும், எந்த நிலையிலும் கட்சியில் சம்பந்தமில்லை என தெளிவுபடுத்தியாகிவிட்டது. அப்படியிருக்க, தினந்தோறும், தொலைபேசியில் பேசி, நாடகத்தை நடத்திக்கொண்டு, வேஷம் போட்டுக்கொண்டு, அ.தி.மு.க தொண்டர்களை ஏமாற்றி இந்தக் கட்சியை கைப்பற்றி 'கொள்ளையடிக்கலாம்' என்ற கனவு எந்தக் காலத்திலும் நிறைவேறாது. அம்மா ஏன் சிறைக்குப் போனாங்க..? இந்தக் குடும்பம் அடித்த கொள்ளையால் அம்மா மீது வீண்பழி ஏற்பட்டது. அதை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டுத்தான், அம்மா சிறைக்குப் போனாங்க. அந்தப் பாவம்தான், அவங்களை சும்மா விடலை. நாலு வருஷம் சிறைக்குப் போனாங்க." என்று கூறினார்.