“இந்தியா“ கூட்டணி பிரதமர் வேட்பாளர் ஸ்டாலின்.. ஒரு கை பார்ப்போம்: அன்பில் மகேஷ் அதிரடி பேச்சு
சேலம்: திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், இந்தியா கூட்டணி சார்பில் முதல்வர் ஸ்டாலின் அடுத்த பிரதமராக வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகத் தெரிவித்தார்.
இன்று திமுக இளைஞரணி மாநில மாநாடு சேலத்தில் நடைபெற்றது. சேலத்தில் உள்ள பெத்தநாயக்கன்பாளையத்தில் இந்த மாநாடு நடந்தது. இந்தக் கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள், நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

அன்பில் மகேஸ்: இந்த மாநாட்டில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், "இந்த மாநாட்டை மாநில உரிமை மீட்பு முழக்கம் என்று சொன்னவர் நமது தலைவர்.. மீட்பு என்றால் ஏதோ அடைமானம் வைக்கப்பட்டது என்ற அர்த்தம் வரும் என்கிறார்கள். உண்மைதான். கடந்த அடிமை அதிமுக ஆட்சியில் மாநில உரிமைகள் அனைத்தும் பறிபோனது. அதை மீட்டெடுக்க நடைபெறும் மாநாடு தான் இந்த மாநாடு.
நமது மாநில உரிமைகள் பறிபோனதால் தங்கை அனிதா தொடங்கி பலர் கல்விக்காக தங்கள் உயிரை நீர்த்துள்ளனர். அந்த மாணவியின் பெயரில் இந்த மாநாட்டின் நுழைவாயில் இருக்கிறது. இனி இதுபோல ஒரு ஒரு நுழைவாயில் அமைந்துவிடக்கூடாது என்பதற்காகவே உதயநிதி போராடி வருகிறார். நான்கு பேர் மட்டும் நல்லா இருந்தால் போதும் எனச் சட்டம் உருவாக்குபவர்கள் சாதாரண தலைவர்கள். நான்கு பேர் இணைந்தால் இந்த நாடே நல்லா இருக்கும் என்று மாற்றியவர்கள் நீதிக்கட்சி தலைவர்கள். அந்த நீதிக்கட்சி தலைவர்களின் வழித்தோன்றல்கள்தான் இங்குள்ளவர்கள்.
நீதிக்கட்சி: தமிழக முதல்வரை வாழும் நீதிக்கட்சி தலைவர் என்றே சொல்லலாம். கொரோனா காலத்திற்குப் பிறகு, மாணவர்கள் எதிர்காலம் கருதி இல்லம் தேடி கல்வித் திட்டத்தை அறிவித்தார். இந்தத் திட்டத்தை இப்போது உலகமே பாராட்டி வருகிறது. பள்ளிக்கூடம் செல்லாதவர்களுக்கும் கல்வி அறிவை ஏற்படுத்தப் பல திட்டங்களைக் கொண்டு வருகிறோம்.
மூன்று எழுத்தில் மாநிலங்களின் மூச்சை அடைக்கும் மத்திய அரசின் GST: அமைச்சர் தங்கம் தென்னரசு விளாசல்!
அதேபோல பசியோடு மாணவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது என்பதற்காகக் காலை உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். இந்தத் திட்டத்தைப் பார்த்து இப்போது மற்ற மாநிலங்களும் கூட அதைப் பின்பற்றி வருகிறது. நீதிக்கட்சி தலைவர்கள் செய்ததைத் தொடர்ந்து செய்பவர் தான் நமது முதல்வர்.
கருணாநிதி திட்டங்கள்: இன்று இருக்கும் மத்திய அரசில் இருப்பவர்கள், இந்த சாதியைச் சேர்ந்தவருக்கு இந்த பொறுப்பைக் கொடுத்துள்ளேன் என்கிறார்கள். ஒரு சாதியில் ஏதோ ஒருவருக்குப் பொறுப்பைத் தந்துவிட்டு நீங்கள் பேசுகிறார்கள். ஆனால், அந்த ஒட்டுமொத்த சாதிக்கும் இட ஒதுக்கீடு கொடுத்தவர் கருணாநிதி. உயர்கல்வியில் இணையும் நபர்கள் எண்ணிக்கை 2050க்குள் 50% அடைய வேண்டும் என்கிறது மத்திய அரசு. ஆனால், அந்த இலக்கை நாம் அடைந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. கருணாநிதி கொண்டு வந்த திட்டங்களே அதற்குக் காரணம்.
நீங்கள் படித்தால் மட்டும் போதும். மற்ற அனைத்தையும் அரசு பார்த்துக்கொள்ளும் என்று சொன்னவர்கள் தான் நாம். இப்போது புதிய கல்விக் கொள்கை என்று ஒன்றைக் கொண்டு வருகிறார்கள். அதை நாம் எதிர்க்கிறோம். எனது மாநிலத்திற்கு என்ன வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும் என்று சொல்பவர் நமது முதல்வர். மக்கள் பிரதிநிதி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக முதல்வர் இருக்கிறார்.
அடுத்த பிரதமர்: அதேநேரம் மக்கள் ஆட்சி மூலம் பதவிக்கு வந்து மத்திய அரசு ஆட்சியாளர்கள் ஆடாத ஆட்டம் ஆடுகிறார்கள். அவர்களுக்குப் பதிலடியை வரும் லோக்சபா தேர்தலில் மக்கள் கொடுப்பார்கள். இதை இந்தியா கூட்டணியை வழிநடத்தும் முதல்வர் ஸ்டாலின் படைப்பார்கள். இந்தியா கூட்டணியில் நீங்கள் கைகாட்டும் நபர் தான் பிரதமர் என்கிறார்கள்.
ஆனால், இன்று ஒட்டுமொத்த இந்தியாவும் நம்பர் 1 முதல்வரான உங்களைக் கைகாட்டுகிறது. இந்தியா கூட்டணியில் பிரதமர் என்ற பார்வை நம் முதல்வர் ஸ்டாலின் பக்கம் திரும்பியுள்ளது. பிரதமர் வாய்ப்பு கிடைத்தால் தட்டிக்கழிக்க வேண்டாம். அதையும் ஒரு கை பார்த்துவிடலாம். ஒட்டுமொத்த உலக அரங்கில் இந்தியாவை முதலிடத்திற்குக் கொண்டு வரப் போராடுவோம்.
உதயநிதி இருக்கிறார்: நீங்கள் போகும் போது நீங்கள் வகுத்துத் தந்த பாதைகள், கொள்கைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல அமைச்சர் உதயநிதி இருக்கிறார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறார்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications