யாழ். தமிழர் அகதி முகாமில் அதிபர் சிறிசேன திடீர் ஆய்வு- 6 மாதங்களில் மீள்குடியேற்றம் செய்வதாக உறுதி!
யாழ்ப்பாணம்: 25 ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தில் அகதிகளாக முகாம்களில் வாழும் மக்கள் 6 மாதத்தில் அவர்களது சொந்த வாழ்விடங்களில் மீள்குடியேற்றப்படுவர் என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன உறுதி அளித்துள்ளார்.
இலங்கையில் தமிழர் வாழும் வடக்கு மாகாண யாழ்ப்பாணத்தில் அந்நாட்டு அரசாங்கம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. அதற்கு முன்னர் யாழ்பாணம் வந்திருந்த அதிபர் மைத்ரிபால சிறிசேன, தெல்லிப்பழை அகதி முகாமுக்கு சென்றார்.
அங்கு தமிழ் மக்களோடு அமர்ந்து அவர்களின் குறைகளைக் கேட்டார். இதன் பின்னர் யாழ்ப்பாணம் மாநகரசபை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதை சுட்டிக்காட்டி பேசினார் சிறிசேன.
அவர் தமது உரையில், 25 ஆண்டுகளாக இடம்பெயர்ந்து வாழும் மக்களின் பிரச்சனையை தீர்க்காமல் இருப்பதுதான் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும். இந்த மக்களை 6 மாதங்களில் குடி அமர்த்துவேன்.
மல்லாகத்தில் முகாம்களில் வாழும் மக்களை எந்த ஒரு முன்னறிவிப்பும் கொடுக்காமல் சென்று பார்த்து உரையாடிவிட்டு வந்தேன். இந்த மக்களை சொந்த இடத்தில் குடி அமர்த்துவதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்றார்.