இலங்கை: திருகோணமலை சிவன் கோவிலை ஆக்கிரமிக்க சிங்களர் முயற்சி என புகார்- இந்திய தூதர் நேரில் ஆய்வு!
இலங்கை: திருகோணமலை சிவன் கோவிலை ஆக்கிரமிக்க சிங்களர் முயற்சி என புகார்- இந்திய தூதர் நேரில் ஆய்வு!
திருகோணமலை: இலங்கையில் பாடல்பெற்ற திருத்தலமான திருகோணமலை திருக்கோணேச்சரம் ஆலயத்தை ஆக்கிரமிக்க சிங்களர் முயற்சி செய்வதாக புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இலங்கைக்கான இந்திய தூதர் திருகோணமலை சிவாலயத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இலங்கையில் தமிழர் தாயக நிலப்பரப்பான வடக்கு கிழக்கில்- கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை உள்ளது. இது இலங்கை தமிழரின் அரசியல் தலைநகராக போற்றப்படுகிறது.
திருகோணமலையில் உள்ள திருக்கோணேஸ்வரம் அல்லது திருக்கோணேச்சரம் சிவாலயமாக மிகவும் புகழ்பெற்றது. தேவராப் பாடல் பெற்ற இலங்கை தலங்களில் திருக்கோணேஸ்வரமும் ஒன்று. தேவராப் பதிகங்களில் கோணமாமலையார் என திருஞானசம்பந்தர், திருக்கோணேச்சர சிவபெருமானை குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.
திருகோணமலை அரசியல் ரீதியாகவும் மிக முக்கியமானதாகவும் வரலாறு நெடுகவும் இருந்து வருகிறது. திருகோணமலை துறைமுகம் யார் வசம் இருக்கிறதோ அவர்களே தெற்காசியாவின் தீர்மானிக்கும் சக்தி என்பது ராஜராஜ சோழன் காலத்தில் இருந்து நடைமுறையில் உள்ள வரலாறு. இதனால் திருகோணமலையை இந்தியா தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் காலந்தோறும் முனைப்பும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இப்போதும் திருகோணமலையில் ஆங்கிலேயர் காலத்து பிரம்மாண்ட எண்ணெய் கிடங்குகள், இந்தியா வசம் இருக்கிறது.
இந்நிலையில்தான் திருகோணமலையை சிங்களமயமாக்கும் முயற்சிகளை இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக திருகோணமலை சிவாலயத்தை சுற்றிய பலநூறு ஏக்கர் நிலம் சிங்களர் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதற்கு ஈழத் தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக மத்திய அரசிடமும் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே, திருகோணமலை சிவாலயத்துக்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் திருகோணமலை சிவாலயத்தில் வழிபாடு நடத்தினார். அப்போது, திருக்கோணேச்சரம் சிவாலய மேம்பாட்டுக்கு இந்தியா உதவி செய்யும் என கூறினார்.
இது தொடர்பாக இலங்கை சிவசேனை தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் கூறுகையில், இலங்கையின் இந்திய தூதுவர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்த புராண மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிவன் கோவிலை மேம்படுத்த இந்தியா அதிகாரப்பூர்வ எண்ணத்தை வெளிப்படுத்தியது. இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவு அமைச்சருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். இந்திய துணைக்கண்டத்தில் மீண்டும் இந்து நலன் விரும்பி பிரச்சாரம் செய்ததற்காக இந்து சங்கர்ஷ் சமிதியின் அனைத்து சகாக்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.