இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை- த.தே.கூட்டமைப்பின் 8 பேர் குழு அறிவிப்பு
கொழும்பு: இலங்கை அரசுடன் தமிழர் பிரச்சனை குறித்து நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான 8 பேர் கொண்ட குழுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் கொழும்பில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமை வகித்தார்.
தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் மாவை சேனாதிராசா, டெலோ சார்பில், கோவிந்தம் கருணாகரன், ஹென்றி மகேந்திரன், என்.சிறிகாந்தா, பிளாட் சார்பில், தர்மலிங்கம் சித்தார்த்தன், ராகவன், சிவநேசன், ஈபிஆர்எல்எப் சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

போர்க்குற்றங்கள்
இந்தக் கூட்டத்தில் தேர்தல் முறை மாற்றம், இலங்கை அரசின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை, மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் விவகாரத்தில் இலங்கை அரசின் மெதுவான செயற்பாடுகள், வடக்கு மாகாண சபையில் முதலமைச்சர் - அமைச்சர்கள் - உறுப்பினர்களுக்கிடையில் காணப்படும் முரண்பாடுகள், ஊழல், மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள், வடக்கு மாகாண அமைச்சரவை மாற்றம், வவுனியா மாவட்டத்தில் வடக்குக்கான சிறப்பு பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதில் சர்ச்சைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
பேச்சுவார்த்தைக்கான குழு
மேலும் தமிழர் பிரச்சனைக்கான அரசியல் தீர்வு, ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை விடுவித்தல், மீள்குடியேற்றம், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை உள்ளிட்ட தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் இலங்கை அரசுடன் விரைவில் அதிகாரபூர்வ பேச்சுக்களை தொடங்குவதற்கான குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது.
8 பேர்
இக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளின் சார்பில் தலா இருவர் என 8 பேர் இடம்பெற்றுள்ளனர். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, டெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன், என். சிறிகாந்தா, ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், பிளாட் சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், ராகவன் ஆகியோர் இக் குழுவில் இடம்பெறுகின்றனர்.
இக் குழு விரைவில் கூடி இலங்கை அரசுடன் நேரில் பேசுவதற்கான நடவடிக்கைகளை தொடங்க உள்ளது.












Click it and Unblock the Notifications