மீனவர் பிரச்சினை பற்றி இந்தியாவுடன் பேச்சுவார்த்தை தொடரும்- இலங்கை அரசு
கொழும்பு: மீனவர்கள் பிரச்சினை குறித்து இந்தியாவுடன் தொடர்ந்து பேசுவோம் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து வருகிறது.
துப்பாக்கி சூடு, படகு பறிமுதல் போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறது. இதற்கு தீர்வு காண இருநாட்டு மீனவர் பிரதிநிதிகளிடையே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
தமிழக மீனவர்களுக்கு அனுமதி:
அதில் இலங்கை கடல் பகுதியில் ஆண்டுக்கு 65 நாட்கள் மீன் பிடிக்க தமிழக மீனவர்களை அனுமதிக்க வேண்டும் என்று இந்திய தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இந்தியா தரப்பில் எதிர்ப்பு:
ஆனால் கடந்த வாரம் அதை இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்தா அமரவீரா நிராகரித்தார். "65 நாட்கள் அல்ல 65 மணி நேரம் கூட மீன் பிடிக்க அனுமதிக்க மாட்டோம்" என்று அவர் கூறினார். அதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது.
வாழ்வாதாரப் பிரச்சினை:
இந்நிலையில் இப்பிரச்சினை குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் மகிஷினி கலோன் நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் "மீன் பிடி பிரச்சினை இரு நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதை இரு நாட்டு அரசுகளும் முழுமையாக உணர்ந்துள்ளன.
நிரந்தரத் தீர்வு அவசியம்:
எனவே நல்லெண்ணத்துடனும் புரிந்து கொள்ளலுடனும் இப்பிரச்சினைக்கு திருப்திகரமான குறுகிய கால மற்றும் நிரந்தர தீர்வு காண்பதற்காக இரு நாட்டு அரசுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவோம்.
கவனமான அணுகுமுறை அவசியம்:
தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிப்பது இரு நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதால் இப்பிரச்சினையை கவனமாக அணுக வேண்டும் என்று இலங்கை அரசு உணர்ந்துள்ளது.
மனிதாபிமான அணுகுமுறையாம்:
அதனால்தான் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்தை மனிதாபிமானத்துடன் அணுகுகிறோம். அவர்கள் விரைவில் விடுதலை ஆக எல்லாவகையான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
மீன்பிடித் தொழில் தொடக்கம்:
இலங்கையின் வடக்கு பகுதி மீனவர்கள் பல ஆண்டுகால போருக்குப் பிறகு இப்போதுதான் மீன் பிடி தொழிலை தொடங்கி உள்ளனர். எனவே அவர்களின் கவலைகளை விசேஷ கவனத்துடன் பரிசீலிக்க வேண்டியுள்ளது.
சுற்றுச்சூழல் பாதிப்புகள்:
மேலும் கடலின் அடி ஆழம் வரை மீன்களை பிடிக்கும் மீன் பிடி முறையால் எழும் சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
தொடர்ந்து பேச்சுவார்த்தை:
இருப்பினும் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண இரு நாட்டு அரசுகளுக்கிடையே பல மட்டங்களில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
3 ஆண்டுகள் அனுமதி:
கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி இருநாட்டு மீனவ பிரதிநிதிகளிடையே சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது தமிழக மீனவர்களை இலங்கை கடல் பகுதியில் 3 ஆண்டுகள் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழக மீனவ பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
உரிய முறையில் பரிசீலனை:
இலங்கை மீனவ பிரதிநிதிகள் அதை உரிய முறையில் பரிசீலித்து நிராகரித்து விட்டனர். அந்த முடிவு இந்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டு விட்டது" என்று தெரிவித்துள்ளார்.