கோவை, மதுரை, திருச்சி வேண்டாம்... யுவராஜை வேலூரில் போடுங்க: உத்தரவிட்ட நீதிபதி
நாமக்கல்: தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக சரணடைந்த யுவராஜின் போலீஸ் காவல் முடிந்த நிலையில், அவரை 15 நாட்கள் வேலூர் சிறையில் அடைக்க நாமக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த யுவராஜ், கடந்த 11ம் தேதி நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்தார். அவரை கடந்த 12ம் தேதி சிபிசிஐடி போலீஸார் நீதிமன்ற அனுமதி பெற்று 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். கடந்த 17ம் தேதி நீதிமன்றத்தில் யுவராஜை ஆஜர்படுத்திய சிபிசிஐடி போலீஸார் மேலும் 2 நாட்கள் காவலில் எடுத்தனர்.
யுவராஜ் தலைமறைவாக இருந்தபோது அடிக்கடி வாட்ஸ்அப்பில் ஆடியோ வெளியிட்டார். இதற்கு விலை உயர்ந்த 5 ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தியுள்ளார். அந்த செல்போன்கள் இந்த வழக்கில் முக்கிய ஆதாராமாக சேர்க்கப்படுகிறது. மேலும், அரசு தரப்பு சாட்சியாக கோகுல்ராஜின் தோழி சுவாதியும் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது செல்போன் யுவராஜிடம் உள்ளது. அதை பறிமுதல் செய்ய போலீசார் அவரை மேலும் 2 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்தனர். கடந்த 2 நாட்களாக நடந்த விசாரணையின்போது யுவராஜ் முன்னுக்குபின் முரணான பதிலே அளித்து வந்ததாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர்.
விசாரணை முடிந்து நேற்று மாலை யுவராஜை நாமக்கல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது, யுவராஜ் தரப்பில், கோவை சிறையில் அடைக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. சிபிஐடி போலீஸார் மதுரை அல்லது திருச்சி சிறையில் யுவராஜை அடைக்க வேண்டும் என்றனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மலர்மதி, நவம்பர் 2ம் தேதி வரை யுவராஜை வேலூர் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து வேலூர் சிறைக்கு யுவராஜை போலீஸார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய யுவராஜின் வழக்கறிஞர் ஆனந்த், கோகுல்ராஜ் கொலை வழக்கிற்கும், யுவராஜ்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. யுவராஜை மிரட்டி வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கி ஒப்புதல் வாக்குமூலம் தயாரித்துள்ளனர். எங்களுடைய எதிர்ப்பை கோர்ட்டில் மனுவாக அளித்துள்ளோம் என்று கூறினார்.