செங்கத்தில் விவசாயி மர்ம மரணம்.. வனத்துறை ஊழியர்கள் 4 பேர் கைது!
செங்கத்தில் மணல் அள்ளிய விவசாயி மர்மமாக உயிரிழந்த விவகாரத்தில் வனத்துறை ஊழியர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை: செங்கத்தில் மணல் அள்ளிய விவசாயி மர்மமாக உயிரிழந்த விவகாரத்தில் வனத்துறை ஊழியர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே வனத்துறையினர் தாக்கியதில் திருமலை என்பவர் உயிரிழந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. சந்தாகவுண்டன்புதூர் வனப்பகுதியில் மாட்டுவண்டியில் மணல் ஏற்றி வந்த திருமலை என்பவர் மர்மமாக இருந்து கிடந்தார்.
வனத்துறையினர்தான் திருமலையை அடித்துக்கொன்றதாக குற்றம்சாட்டிய கிராம மக்கள் வனத்துறை ஊழியர்களை சரமாரியாக தாக்கினர். மேலும் வனத்துறை ஊழியர்களின் வாகனங்களையும் தீ வைத்து கொளுத்தினர்.
காவல்துறை தடியடி
வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் நடத்தி விரட்டியதால் ஆத்திரமடைந்த மக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
போர்க்களம் போல் காட்சியளித்தது
பதிலுக்கு காவல்துறையினரும் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வனத்துறை ஊழியர்கள் மீது வழக்கு
இதுதொடர்பாக கிராம மக்கள் 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் விவசாயி திருமலை மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து செங்கம் போலீசார் விசாரணை நடத்தினர்.
திருமலை கொலை - கைது
இந்நிலையில் திருமலை கொலை செய்யப்பட்ட வழக்கில் வனத்துறை ஊழியர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வனத்துறை ஊழியர்கள் தாண்டவராயன், சதீஷ், தினகரன் உட்பட 4 வன ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.