மூவர் தூக்கு ரத்து: மரண தண்டனைக்கு எதிரான ஒரு தாயின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி
சென்னை: "மரண தண்டனைக்கு எதிரான போராட்டம் என்பது என்னுடைய மகனுக்கான போராட்டம் மட்டுமல்ல. மாறாக, ஒட்டுமொத்தமாக மரண தண்டனையே இந்தியாவில் நிறைவேற்றப்படக் கூடாது" என்பதுதான் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளின் முழக்கம்.
மரணக்கொட்டடியில் 23 ஆண்டுகாலமாய் வாடும் மகனின் உயிரை காக்க தாயாக அற்புதம்மாள் நடத்திய போராட்டங்களை வார்த்தைகளினால் சொல்ல முடியாது.
தூக்குக்கான காலம் குறிக்கப்பட்ட உடன் மகனின் உயிரைக்காக்க அழுத கண்ணீர்தான் தண்டனையை நிறுத்திவைக்க காரணமாக இருந்தது. இன்றைக்கு மரணதண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டிருக்கிறது.
மகிழ்ந்த அற்புதம்மாள்
மரணத்தின் வாயிலில் இருந்து மகனை மீட்ட ஈன்ற பொழுதை விட பெருமகிழ்ச்சி அடைந்திருப்பார். ஆனாலும் மகனுக்காக மட்டுமல்லாது மரணத்திற்கு எதிரான போராட்டம் தொடரும் என்று கூறுகிறார் இந்தத் தாய்.
என் மகனும் விடுதலையாவான்
கடந்த ஜனவரி 22ம் தேதி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த வீரப்பன் கூட்டாளிகளுக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட போதே என் மகனும் விடுதலையாவான் என்று நம்பிக்கையோடு கூறினார் அற்புதம்மாள். அந்த தாயின் நம்பிக்கை வீணாகவில்லை.
சென்னை புத்தக கண்காட்சியில்
கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் அரங்கு ஒன்றினை வாடகைக்கு எடுத்து தூக்குத் தண்டனைக்கு எதிரான புத்தகங்கள், சி.டி.க்கள் போன்றவற்றை காட்சிப்படுத்தி விற்பனை செய்தார் அற்புதம்மாள்.
மரண தண்டனைக்கு எதிராக
தன் அரங்கிற்கு வந்த வாசகர்களிடம் தூக்குத் தண்டனை என்பது மனிதனுக்கு அளிக்கக் கூடிய அநீதியின் உச்சக்கட்டம் என்றும், இது மனித சமூகத்திற்கு எதிரானது என்றும் பிரச்சாரம் செய்தார்.
இந்தியாவில் இனிமேல் யாருக்கும் தூக்குத் தண்டனை வழங்கப்படக் கூடாது "இந்தப் பணத்தைச் செலவழிப்பதன் மூலம் என்னுடைய மகன் தூக்கில் இருந்து காப்பாற்றப்படுவான் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
போராட்டத்திற்கு விடிவு
மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்த உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டுள்ளது. 23 ஆண்டுகாலம் சிறையில் தண்டனை அனுபவித்த தனது மகன் எப்போது விடுதலையாவான் என்று தெரியாமல் தவிக்கிறார் இந்த தாய்.