மேலும் ஒரு தமிழக அரசுப் பேருந்தில் ஓட்டை... செருப்பு மட்டும் கீழே விழுந்ததால் தப்பிய பயணி
விழுப்புரம் : சென்னையிலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கிச் சென்ற பேருந்தில் இருந்த ஓட்டை வழியே பயணியின் செருப்பு மட்டும் விழுந்ததையடுத்து சக பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் இயங்கும் அரசு பேருந்துகள் முறையாக பராமரிக்காமல் ஓட்டை உடைசலுடன் இயங்கி வருவதால் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.
நெல்லை அருகே அரசுப் பேருந்தின் ஓட்டை வழியே சாலையில் விழுந்து ஸ்வாதி என்ற பெண் அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் இருந்து விழுப்புரம், திருக்கோவிலூர் வழியாக நேற்று கள்ளக்குறிச்சிக்கு அரசு பேருந்து சென்றது. இதில் சுமார் 40 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அப்போது பேருந்தின் பின் படிக்கெட்டில் ஓட்டை இருந்ததை கண்ட பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். அந்த ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவரின் செருப்பு சாலையில் விழுந்துவிட்டது.
இதனால் பயணிகள் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, விழுப்புரம் பேருந்து நிலையத்திற்கு பேருந்து வந்ததும் திடீரென பேருந்து ஓட்டுனர், நடத்துனரிடம் பயணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த விழுப்புரம் பேருந்து நிலைய மேலாளர், பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் மாற்று பேருந்து வரவழைக்கப்பட்டு அதில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து ஓட்டை விழுந்த பேருந்து பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
தமிழக அரசு பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக பெண் விழுந்த சம்பவத்துக்குப் பிறகும் போக்குவரத்துக் கழகங்களின் அலட்சியம் காரணமாக ஓட்டை உடைசலுடன் கூடிய பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படுவது பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.