பள்ளி பாடத்திட்டத்தை மாற்ற 10 பேர் கொண்ட குழு: தமிழக அரசு உத்தரவு
சென்னை: தமிழகத்தில் பாடத்திட்டங்களை மாற்றுவது தொடர்பாக 10 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டது.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக உள்ள செங்கோட்டையன் கடந்த சில நாள்களாக பள்ளிக் கல்வியில் பல்வேறு மாற்றங்களை ஐஏஎஸ் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் செய்து வருகிறார். அந்த வகையில் பிளஸ் 2 தேர்வில் ரேங்கிங் சிஸ்டமை இந்த ஆண்டு முதல் நீக்கினார்.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் மொத்த மதிப்பெண்களை 600-க்கும், 3 மணி நேரமாக உள்ள தேர்வு நேரத்தை இரண்டரை மணிநேரமாக குறைத்தும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. பிளஸ் 1 வகுப்பும் இந்த ஆண்டு முதல் பொதுத் தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. இந்த இரண்டு தேர்வு முடிவுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்ணை சராசரியாக கொண்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
நீட் தேர்வை எதிர்கொள்ளும் அளவுக்கு அரசு பள்ளிகளின் கல்வித் தரம் உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு 2018-19-ஆம் கல்வியாண்டிலும், 2, 7, 10 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு 2019-2020-ஆம் கல்வியாண்டிலும், 3, 4, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு 2020-21-ஆம் கல்வியாண்டிலும் பாடத்திட்டங்கள் மாற்றப்படவுள்ளன.
அதன்படி தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டம் மாற்ற கலைத்திட்ட வடிவமைப்புக் குழுவை தமிழக அரசு இன்று நியமித்து அரசாணை வெளியிட்டது. இதில் 10 பேர் இடம் பெற்றிருப்பர். குழுவின் தலைவராக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ஆனந்தகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
குழுவில் வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் ராமசாமி, எழுத்தாளர் தியோடர் பாஸ்கரன் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் தவிர பள்ளிக் கல்வித் துறையின் செயலாளர்கள், மூத்த அதிகாரிகளும் இடம் பெறுவர்.