ஈகோ பார்க்காமல் நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வேண்டும்... சத்யராஜ் வார்னிங்!
புதுக்கோட்டை மாவட்டம் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்று நடிகர் சத்யராஜ் பேசிய வீடியோ முகநூல் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.
சென்னை: நெடுவாசலில் தொடங்க திட்டமிட்டுள்ள ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சத்யராஜ் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் பூமிக்கு அடியில் துளையிட்டு ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனை கண்டித்து மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து முதல் கட்ட போராட்டம் நடத்திய போதும் கர்நாடக மாநில பாஜக பிரமுகர் ஒருவரின் நிறுவனமான ஜெம் நிறுவனத்துடன் சேர்ந்து ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்பந்தம் போடப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் 100 நாட்களைக் கடந்து போராட்டத்தை தொடர்கின்றனர்.
ஏழைகளுக்கு நல்லதா என பார்க்க வேண்டும்
இந்நிலையில் நெடுவாசல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சத்யராஜ் பேசிய பேச்சு முகநூலில் வைரலாகி வருகிறது.
அதில் சத்யராஜ் பேசியிருப்பதாவது: இது மேம்போக்கான விஷயமல்ல நம் நாடு விவசாய நாடு, ஒரு திட்டம் ஏழை எளிய மக்களை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். இதனால் பெரு முதலாளிகளுக்கு என்ன பயன் என்று அரசு நினைக்கக் கூடாது.
குப்பையில் தயாரிக்கலாம்
பூமிக்கு அடியில் கிடைக்கும் ஹைட்ரோகார்பனை விட குப்பை கூலங்களை சேகரித்து அதிலிருந்து அதிக அளவு ஹைட்ரோகார்பன் தயாரிக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதைத் தான் அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் செய்கின்றன.
ஈகோ வேண்டாம்
குப்பைகளே இல்லாத நாடுகள் குப்பையை விலைக்கு வாங்கி அதில் இருந்து ஹைட்ரோகார்பன் தயாரித்து அதிலிருந்து மின்சாரத்தைத் தயாரித்து பயன்படுத்துகின்றன. ஆனால் தான் கொண்டு வந்த திட்டத்தை நிறுத்துவதா என்று ஈகோ போட்டி இங்கே நடந்து கொண்டிருக்கிறது.
போராட்டத்திற்கு ஆதரவு
ஒரு திட்டம் கொண்டு வரப்படலாம் அதில் தவறு இல்லை, ஆனால் அந்த திட்டத்தால் மக்களுக்கு பயன் இல்லை என்று தெரிந்தால் அதைக் கைவிடுவதில் எந்தத் தவறும் இல்லை. வறட்டு பிடிவாதத்தோடு ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்றியே தீறுவேன் என்று அடம்பிடிப்பதால் எந்தப் பயனும் இல்லை. எனவே ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதோடு, இந்த திட்டத்தை எதிர்த்து போராடுபவர்களுக்க எனது முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன், இவ்வாறு அவர் பேசியுள்ளார்.