நேர்மை, நியாயம், நீதி வென்றது... நாளை முதல் களத்தில் பார்ப்போம் - விஷால் உற்சாகம்!
நேர்மை, நியாயம், நீதி வென்றுள்ளது, நாளை முதல் ஆர்கே நகர் தேர்தல் களத்தில் மக்களை சந்திக்க உள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
சென்னை : நேர்மை, நியாயம், நீதி வென்றுள்ளது. ஆர்கே நகர் தேர்தலில் தன்னுடைய வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளதற்கு நடிகர் விஷால் உற்சாகமடைந்துள்ளார்.
நடிகர் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் மனுவை முன்மொழிந்தவர்கள் பின்வாங்கியதன் பின்னணியில் மிரட்டப்பட்டதற்கான ஆடியோ ஆதாரத்தை விஷால் வெளியிட்டார். இதனையடுத்து இரண்டாவது பரிசீலனைக்குப் பின்னர் விஷாலின் வேட்பு மனு ஏற்கப்பட்டது.
இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், முதலில் நான் சொல்ல விரும்புவது நேர்மை, நியாயம் நீதி ஜெயித்துள்ளது. ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. முதலில் அதற்கு தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மனு ஏற்பு
தேர்தல் அதிகாரிகளின் பரிசீலனைக்காக காத்திருந்தோம், தேர்தல் நடத்தும் அதிகாரி நியாயமாக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்துள்ளார். ரொம்ப நன்றி தேர்தலில் சந்திப்போம், மக்களக்கு நல்லதையே நினைப்போம். இரண்டு கையெழுத்து போலி என்று சொல்லி புகார் இருந்தது விசாரணை நடத்திய பின்னர் அதில் உண்மை இல்லை என்பது தெரிந்த பின்னர் என்னுடைய மனு ஏற்கப்பட்டுள்ளது. அந்த ஆடியோவில் இருப்பது உண்மை தான் என்று எல்லோரும் நம்புகிறார்கள்.
ஆராய விரும்பவில்லை
யார் எதிர்க்கிறார்கள், குற்றம்சாட்டுகிறார்கள், தூண்டிவிட்டு மனுவை நிராகரிக்க நினைக்கிறார்கள் என்றெல்லாம் நான் ஆராய விருப்பப்படவில்லை. நான் ஆர்கே நகர் தேர்தலில் மக்களை சந்தித்து மக்களுக்காக நல்லது செய்ய உள்ளேன்.
அனைத்திலும் தடைகளே
நேர்மையாக தேர்தலை சந்திக்க உள்ளேன். எல்லாமே நேர்மையாக நியாகமாக தேர்தல் ஆணையம் தீர்ப்பை அளித்துள்ளது. வேட்பு மனு தாக்கல் முதல் அனைத்தும் தடைகளே. நல்லது நடக்கும் போது தடைகள் வரும் அதையெல்லாம் கடந்து தான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.
அனைவருக்கும் நன்றி
எனக்காக சக சுயேச்சை வேட்பாளர்கள் பெயர், ஊர் தெரியாதவர்கள் துணையாக நின்று தயவு செய்து நியாயத்தை நிலை நாட்டுங்கள் என்று கேட்டனர். விஷால் என்பவர் யார் என்றே தெரியாது என்று எனக்காக நியாயத்திற்காக குரல் கொடுத்தனர். எனக்கு துணையாக இருந்த அனைவருக்கும் நன்றி நாளை முதல் ஆர்கே நகர் தேர்தல் களத்தில் சந்திப்போம் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.