'நமது எம்ஜிஆர்' நாளிதழுக்கு போட்டி.. பிப்ரவரி 24 முதல் வெளிவருகிறது 'நமது அம்மா'
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழ் வரும் பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் வெளியாகவுள்ளது.
சென்னை: அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழ், ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் வெளியாகிறது.
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் அதனை சார்ந்தவர்களும் தங்களது நலத்திட்ட உதவிகள், தங்கள் கொள்கைகள், சித்தாந்தங்கள் மக்களை எளிதில் சென்றடைய உடனடியாக தொடங்கப்படுவது டிவி சேனல்களும், செய்தித்தாள்களும் ஆகும்.
அதுபோல் ஜெயலலிதாவுக்கு ஜெயா டிவி, நமது எம்ஜிஆர், திமுகவுக்கு கலைஞர் டிவி, முரசொலி, விஜயகாந்துக்கு கேப்டன் டிவி, பச்சமுத்துவுக்கு புதிய தலைமுறை, காங்கிரஸ் கட்சிக்கு வசந்த் டிவி என இத்தனை சேனல்கள் உள்ளன.
காட்சிகள் மாறும்
பெரும்பாலும் தமிழகத்தை திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. இதனால் தற்போது அதிமுக ஆட்சியின் அவலத்தை திமுகவின் டிவி சேனல்கள் உள்ளிட்டவற்றில் காண்பிக்கப்படும். இதே திமுக ஆட்சிக்கு வந்தால் அதன் நலத்திட்டங்கள் கலைஞர் டிவியில் காட்டப்படும். இது அனைவரும் அறிந்த ஒன்றே.
மாறிவிட்டது
மேற்கண்ட கொள்கைகளின்படி, ஜெயா டிவியிலும், நமது எம்ஜிஆர் நாளிதழிலும் அதிமுக அரசை போற்றும் செய்திகளும், கலைஞர் தொலைகாட்சிகளிலும் அந்த அரசை தூற்றும் செய்திகளும் வந்த வண்ணம் இருந்தன. இவையெல்லாம் ஜெயலலிதா இருந்த வரை, அதிமுகவும் பிளவுப்படாத வரை.
தினகரன் அணி
அதிமுக இரு அணிகளாக பிளவுப்பட்டு தற்போது ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் ஒன்றிணைந்து விட்டாலும் தினகரன் அணி தனித்து செயல்பட்டு வந்தது. இந்நிலையில் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட ஜெயா டிவியும், நமது எம்ஜிஆர் நாளிதழும் அரசுக்கு எதிராகவும் தினகரனுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்தது.
நமது நாளிதழை கைப்பற்றுவோம்
கடந்த செப்டம்பர் மாதம் அதிமுக செயற்குழு கூட்டத்தில் ஜெயா டிவியையும், நமது எம்ஜிஆர் நாளிதழையும் மீட்க போராடுவோம் என்று அதிமுகவினர் தீர்மானம் நிறைவேற்றினர். இந்நிலையில் அவை இரண்டும் சசிகலா குடும்பத்தினர் பங்குதாரர்களாக உள்ளதால் அதிமுகவுக்கென தனி டிவி சேனலும், செய்தித்தாளும் தொடங்க முடிவு செய்தனர். அதன்படி அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு என்று நமது அம்மா என்ற நாளிதழை ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ஆம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.