மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவா, எதிர்ப்பா? இதுதான் நிலை
Recommended Video
சென்னை: மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் அதிமுகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து மட்டத்திலும் எழுந்துள்ளது.
2003ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு முதல் முறையாக மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடக்க உள்ளது.
தெலுங்கு தேசம் கட்சியின் மனுவை லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொண்டுள்ளார்.
நாளை தெரியும்
வரும் வெள்ளிக்கிழமை நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற உள்ளது. அன்றே வாக்கெடுப்பும் நடக்கும். எனவே, அன்றைய தினம் பாஜகவுக்கு ஆதரவு உள்ளதா இல்லையா என்பது தெரிந்துவிடும் என்பதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. பாஜகவின் அனைத்து எம்.பிக்களும் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது லோக்சபாவில் இருக்க வேண்டும் என்றும், தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றும் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதிமுக எந்த பக்கம்
அதேநேரம், அதிமுக இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எந்த பக்கம் இருக்கப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜகவுடன் அதிமுக நட்பு பாராட்டி வந்தாலும், சமீபத்திய ஐடி ரெய்டுகளையடுத்து அதிமுக, பாஜகவை எதிர்த்து வாக்களிக்குமா என்ற கேள்வி பல மட்டங்களில் ஆர்வத்தோடு எழுந்துள்ளது. திமுக செயல் தலைவர் ஸ்டாலினும், அதிமுக நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்று பாஜக அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
பங்கேற்பு இல்லை
இதுகுறித்து அதிமுக வட்டாரங்களில் கேட்டபோது, நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கெற்காமல் இருப்பதே அதிமுகவின் திட்டம் என்று தெரிய வருகிறது. பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தால், தமிழகத்தில் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எதிர்த்து வாக்களித்தால் மத்திய அரசின் ஒத்துழைப்பை இழக்க நேரிடும். எனவே பங்கேற்காமல் இருப்பதே நல்லது என்கிற முடிவில் உள்ளதாம் அதிமுக.
பாஜகவிற்கு பலம் உள்ளது
பாஜகவிற்கு லோக்சபாவில் தனிப்பெரும்பான்மை பலம் உள்ளது. பெரும்பான்மைக்குத் தேவை - 268 உறுப்பினர்கள் என்ற நிலையில், பாஜகவிற்கு மட்டும் 272 உறுப்பினர்கள் பலம் உள்ளது. இதுதவிர கூட்டணி கட்சிகள் பலமும் உள்ளது. எனவே அதிமுக எதிர்த்து வாக்களித்தாலும், ஆட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே அதிமுக நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று இரவு வெளியாகும் வாய்ப்புள்ளது. இதேபோலத்தான் தெலுங்கானா ராஷ்டிரிய சமித்தி மற்றும் பிஜு ஜனதாதளம் ஆகியவையும் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிக்க உள்ளன.