"அம்மா பர்த்டே" தான் "டெட்லைன்"... அதுக்குள்ள... சென்னைக் கவுன்சிலர்களுக்கு ஓபிஎஸ் வார்னிங்!
சென்னை: சென்னை வெள்ளத்தால் பொதுமக்களிடம் அதிமுக சம்பாதித்துள்ள அவப்பெயர்களை விரைந்து நீக்க வேண்டும், இல்லையென்றால் மாநகராட்சியைக் கலைக்க ஜெயலலிதா தயாராக இருப்பதாகவும் சென்னை கவுன்சிலர்கள் கூட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாம்.
இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளைத் தற்போதே கட்சிகள் தொடங்கிவிட்டன.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை சென்னை அதிமுக தலைமை நிலையத்தில் அக்கட்சியின் சென்னைக் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. மாலை சுமார் 7.20 மணிக்குத் தொடங்கிய இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் ஓ.பி.எஸ்., நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், பழனியப்பன், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட ஐவர் அணிதான் தலைமையேற்று நடத்தினார்களாம்.
இவர்கள் மட்டுமின்றி இந்தக் கூட்டத்தில் சென்னையில் இருக்கும் அமைச்சர்கள் கோகுல இந்திரா, வளர்மதி, டி.கே.எம்.சின்னையா, அப்துல் ரகீம் உள்ளிட்டவர்களும், எம்.எல்.ஏ-க்களும் கலந்து கொண்டனர்.
சென்னை வெள்ளம்...
அவசரமாகக் கூட்டப்பட்ட இந்தக் கூட்டத்தில், திமுக வசம் இருந்த சென்னையை, வீராணம் திட்டம் உள்ளிட்ட சிறப்பான திட்டங்கள் மூலம் ஜெயலலிதா எப்படி அதிமுக கோட்டையாக மாற்றினார் என்றும், ஆனால் கடந்த மாதம் பெய்த மழை மற்றும் வெள்ளத்தில் கவுன்சிலர்களின் அஜாக்கிரதையால் தற்போது அதிமுக மீது சென்னை மக்கள் எவ்வாறு அதிருப்தியில் உள்ளார்கள் என்பது குறித்தும் விலாவாரியாக ஓபிஎஸ் பேசினாராம்.
அடுக்கடுக்கான புகார்கள்...
வெள்ளத்தில் சென்னை மூழ்கியபோது அதிமுக கவுன்சிலர்களின் உதவிகள் பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்பதே கட்சித் தலைமையின் கோபத்திற்குக் காரணமாம். சென்னையில் ஆளும் கட்சி கவுன்சிலர்கள் மீது இதுவரை ஏராளமாக புகார்கள் வந்து குவிந்துள்ளதாம்.
கவுன்சிலர்களே காரணம்...
சென்னை மக்களிடையே அதிமுகவிற்கு பெரும் அவப்பெயர் கிடைத்ததற்கு கவுன்சிலர்களே முக்கியக் காரணம் என ஜெயலலிதா கடும் கோபத்தில் இருக்கிறாராம். வெள்ள நிவாரணப் பணிகளில் கவுன்சிலர்களின் மோசமான செயல்பாடுகள் பற்றி அங்குலம் அங்குலமாக அம்மாவிடம் ஆதாரங்கள் இருக்கிறதாம்.
குற்றச்சாட்டு...
தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் கவுன்சிலர்களால் தனது ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டிருப்பதாக அவர் கருதுகிறாராம். மிக இக்கட்டான நேரத்தில் மக்களுக்கு ஆதரவாக கவுன்சிலர்கள் செயல்படவில்லை என்பது அம்மாவின் குற்றச்சாட்டாம்.
எதிர்க்கட்சிகளின் சாதுரியம்...
வெள்ளத்தை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சில எதிர்கட்சிகள் சிறப்பாக நிவாரணப் பணிகளில் ஈடுபட்டன. இதனால் ஊடகங்களில் அவர்களது பெயரே பெரிதும் அடிபட்டது.
விமர்சனம்...
ஆபத்துக் காலத்தில் உதவாத அதிமுகவினர் மீது சென்னை மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது. இது அவர்களின் பேட்டிகளில் வெளிப்படையாகவே தெரிந்தது. சென்னை மக்களின் இந்த ஆதங்கம் சில ஊடகங்கள் மூலம் தமிழகம் முழுவதுமே சென்றடைந்தது. இதனால் வெள்ளத்தால் தமிழகம் முழுவதுமே அதிமுகவின் செயல்பாடுகள் அதிகமாக விமர்சிக்கப்பட்டது.
நிவாரணத் தொகை...
வெள்ளம் பாதித்த பகுதிகளில் பல அமைச்சர்களால் நுழையவே முடியாத நிலை ஏற்பட்டது. நிவாரணத் தொகை வழங்குவதில் தாமதம் மற்றும் குழப்பமும், ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந்துவிட்டது.
அதிமுக அரசின் அஜாக்கிரதை...
ஏற்கனவே, அதிமுக அரசின் அஜாக்கிரதையால் தான் சென்னை வெள்ளத்தில் மூழ்கியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், அப்போது கவுன்சிலர்களின் அலட்சியம் மக்களுக்கு அதிமுக மீது மேலும் வெறுப்பை ஏற்படுத்துவதாக அமைந்து விட்டன.
தேர்தல் வெற்றியைப் பாதிக்கும்...
மக்களின் இந்த வெறுப்புணர்ச்சி சட்டசபைத் தேர்தலில் எதிரொலித்து விடக்கூடாது என்பது தான் கட்சித் தலைமையில் கவலையாம். இதனால் தான் இந்த அவசரக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாம். இதில் சென்னை கவுன்சிலர்களுக்கு மிரட்டும் தொனியில் அட்வைஸ் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அம்மாவின் பிறந்தநாள்...
அதாவது அடுத்தமாதம் 24ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட இருக்கிறது. அதற்குள்ளாக எப்பாடுபட்டாவது சென்னை மக்களிடம் இழந்த நற்பெயரை மீண்டும் கவுன்சிலர்கள் பெற வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம்.
எழுதப்படாத தீர்மானங்கள்...
இன்னமும் வெள்ள நிவாரண நிதி சென்றடையாதவர்கள் குறித்து கணக்கெடுத்து அவர்களுக்கு அந்த நிதி சென்றடைய உதவுவது, வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கவுன்சிலர்கள் தங்கள் சொந்தக் காசை செலவு செய்து உதவி செய்வது, சொந்தக் கட்சியிலேயே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அதிருப்தியில் உள்ளவர்களைத் தனியாகச் சந்தித்து அவர்களின் மனதை மாற்றுவது என பல்வேறு எழுதப்படாத தீர்மானங்கள் அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாம்.
மாநகராட்சியைக் கலைக்க முடிவு?
அதை செய்யத் தவறினால் சென்னை மாநகராட்சியை கலைத்து விடுவது என்ற முடிவில் ஜெயலலிதா இருப்பதாகவும் கவுன்சிலர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாம். ஏற்கனவே, கடந்த 2012ம் ஆண்டும் இதே போல் சென்னையில் கவுன்சிலர்கள் கூட்டத்தை அதிரடியாகக் கூட்டி ஜெயலலிதா நேரில் அதில் கலந்து கொண்டார். அப்போதும் இதே போன்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது நினைவு கூரத்தக்கது.
பழ.கருப்பையா...
கட்சியை விமர்சித்ததாக நீக்கப்பட்டுள்ள பழ.கருப்பையா, அதிகம் குற்றம் சாட்டியது கவுன்சிலர்களைத் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் எதிரொலியாகவும் இந்த அவசரக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
சென்னைக்கோட்டை...
சென்னை மாநகராட்சியில் மொத்தம் 22 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. அதில் ஒரு தொகுதியைத் தவிர மற்ற அனைத்து தொகுதிகளும் அதிமுக வசமே உள்ளது. வரும் சட்டசபைத் தேர்தலில் அந்தத் தொகுதியையும் தங்களது வெற்றித் தொகுதியாக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம்.
கட்சியின் எதிர்காலம்...
ஆனால், கவுன்சிலர்களின் செயல்பாட்டால் சென்னையில் அதிமுகவின் வெற்றி கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் கட்சியின் எதிர்காலமே கேள்விக்குறியாகி விடும், விரைந்து இந்த அவப்பெயர்களை மாற்றுங்கள் என கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்களிடன் அறிவுறுத்தப் பட்டுள்ளதாம்.
கவுன்சிலர்களின் மனக்குறைகள்...
ஓ.பி.எஸ். உட்பட அமைச்சர்கள் அனைவரும் கூறிய அறிவுரைகள் அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டார்களாம் கவுன்சிலர்கள். ஆனால், கவுன்சிலர்கள் பக்கமும் கட்சித் தலைவர்கள் மீது சில மனக்குறைகள் இருக்கிறதாம்.
கண்டுகொள்ளாத அமைச்சர்கள்...
அதாவது கவுன்சிலர்களுக்கு மாத சம்பளமோ, பெட்ரோல், டீசல் அலவன்சோ தரப்படுவது இல்லை. சென்னை மேயரும், சென்னைக்குள் இருக்கும் இரண்டு அமைச்சர்களும், சென்னைக்கு புறநகர் பகுதியில் இருக்கும் இரண்டு அமைச்சர்களும் கவுன்சிலர்களுக்கு எதையும் செய்து தருவது இல்லையாம்.
சொந்தக்காசில் கட்சிப்பணிகள்...
இது மட்டுமின்றி சென்னையில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளை கவுன்சிலர்களே சொந்தக் காசில் நடத்துகிறார்களாம். மக்களிடம் நல்ல பெயரைச் சம்பாதிக்க லஞ்சமும் வாங்கக்கூடாது, வீடு வீடாக நிவாரணம் என்ற பெயரில் பரிசும் கொடுக்க வேண்டும் என்றால் அதற்கு பணத்திற்கு எங்கே போவது என அவர்கள் கேட்கிறார்கள்.
தீயா வேலை செய்யத் தயார்....
அமைச்சர்களும், மாவட்டச் செயலர்களும் பண உதவி செய்தால் களத்தில் இறங்கி, இழந்த பெயரை மீட்க உடனே தீயாக வேலை செய்யத் தயாராக இருக்கிறார்களாம் சென்னை அதிமுக கவுன்சிலர்கள்.
சைதை துரைசாமியின் நிலை...
இதற்கிடையே இந்தக் கூட்டத்திற்கு சென்னை மேயர் சைதை துரைசாமிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையாம். தகவல் அறிந்து தானாக கூட்டத்திற்கு வந்தவரையும் உள்ளே அனுமதிக்கவில்லையாம்.
நமக்கு ஒரே ஒரு டவுட்தான்..
இப்ப, நமக்கு ஒரே ஒரு டவுட்தான்.. இதே மக்களிடம் வெள்ள நிவாரணப் பணிகளை சரியாக செய்யாத காரணத்தால் அதிமுக ஆட்சி சம்பாதித்துள்ள அவப் பெயரையும் இதேபோல விரைந்து துடைக்காவி்ட்டால் ஆட்சியையும் ராஜினாமா செய்ய அம்மா தயாரா இருக்காங்களா..?
கேள்வி கேட்பது சுலபம்.. பதில்தான் கிடைக்காது!