மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி தான் இந்திய இறையாண்மை நிலைக்க ஒரே வழி: சீமான்
மாநிலத்தில் சுயாட்சி ; மத்தியில் கூட்டாட்சி தத்துவம் தான் இந்திய இறையாண்மை நிலைக்க ஒரே வழி என்று சீமான் குறிப்பிட்டு உள்ளார்.
நெல்லை : மாநிலத்தில் சுயாட்சி ; மத்தியில் கூட்டாட்சி என்கிற தத்துவம் தான் இந்திய இறையாண்மை நிலைக்க ஒரே வழி என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறிப்பிட்டு உள்ளார்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் 2009ம் ஆண்டு நடந்த கூட்டம் ஒன்றில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக சீமான் மீது வழக்குத்தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று நெல்லை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் சீமான் நேரில் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ராம்தாஸ் வழக்கை மார்ச் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதன் பிறகு நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியே வந்த சீமான் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அவரிடம் பட்ஜெட் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த சீமான், பாஜக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டை, எஞ்சிய ஒரு ஆண்டில் எதையும் நிறைவேற்ற முடியாது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலையும் கருத்தில் கொண்டே பட்ஜெட்டை வெளியிட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்திற்கும், சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது அவசியமற்றது. மாநிலத்திற்கு தனியாகவும், மத்தியில் தனியாகவும் தேர்தல் நடத்த வேண்டும். இரண்டிற்கும் ஒரே செலவுதான் ஆகும்.
பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் பா.ஜக ஆட்சிக்கு வர முடியாது. மத்தியில் இந்த முறையோடு பாஜக ஆட்சி முடிவு பெறும். மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற தத்துவத்தின்படி தான் ஆட்சி அமைய வேண்டும். அதுதான் இறையாண்மை நிலைக்க ஒரே வழி. பாஜகவிற்கும், காங்கிரஸிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
இந்தியாவில் உள்ள அனைத்து இனத்திற்கும் பிரதமர் ஆகும் வகையில் சுழற்சி முறையில் கூட்டாட்சி முறையை அமல்படுத்த வேண்டும். அப்போது தான் இந்திய இறையாண்மை வலுப்பெறும். அடுத்து வரும் சட்டசபைத் தேர்தலில் நாங்கள் தமிழ், தமிழர்கள் அமைப்புகளுடன் ஒன்று சேர்ந்து தேர்தலில் நிற்போம் என்று சீமான் தெரிவித்து உள்ளார்.