கார்... கார்த்திக்... ரொம்ப "கன்பூஸியஸா" இருக்காரே நம்ம "சந்திரமவுலி"?
சென்னை: சிலர் எதைச் செய்தாலும் சரியாகவே செய்வார்கள். சிலர் எதைச் செய்தாலும் தப்புத் தப்பாகவே செய்வார்கள். இது அவர்களது குணம் சம்பந்தப்பட்டதா அல்லது மூளை சம்பந்தமானதா என்பது ஆய்வுக்குரிய விஷயம். ஆனால் சரியாகச் செய்தால் கூட தப்பி விடலாம். ஆனால் தப்புத் தப்பாக எப்போதுமே இருந்தால் அது சர்ச்சையாகி விடுகிறது, கேள்விக்குறியாகி விடுகிறது அவர்களின் முடிவுகளும்.
நம்ம கார்த்திக் கூட அந்த வகையில்தான் வருகிறார். அவர் இதுவரை நடிப்பில் பெற்ற வெற்றியில் ஒரு சதவீதத்தைக் கூட அரசியலில் பெறவில்லை. காரணம், அவர் எடுக்கும் முடிவுகள்.
என்ன கொடுமை என்றால், அதை முடிவு என்று கூட கூற முடியாத அளவுக்கு அடுத்த நொடியே தான் எடுத்த முடிவை அவரே மாற்றி விடுகிறார். புள்ளி வைப்பதே இல்லை, எல்லாமே கமா....தான்.
காமாசோமா
எடுத்த எந்த முடிவிலும் இதுவரை கார்த்திக் உறுதியாக இருந்ததாக வரலாறே இல்லை. எல்லாமே காமாசோமா முடிவுகளாகவே இருந்துள்ளது.
இருந்த கூட்டத்தையும் இழந்தவர்
இவரது குழப்பமான நிலை காரணமாக ஒரு காலத்தில் இவருடன் இருந்த தொண்டர் கூட்டம் இப்போது எங்கே போனது என்றே தெரியவில்லை. ஒரு நேரத்தில் கார்த்திக்குக்கு அப்படி ஒரு ஆதரவு இருந்தது உண்மை. அதை யாருமே மறுக்க முடியாது. ஆனால் இன்று அது இருக்கிறதா என்பதே கேள்விக்குறிதான்.
ஒரு கட்சி.. பல முடிவு
ஒரே ஒரு கட்சியை வைத்துக் கொண்டு அதை பலப்படுத்தாமல், அவர் பலமாக குழம்பிப் போய்க் கிடக்கிறார். ஒவ்வொரு முறையும் ஒரு முடிவு. அதிமுகவை ஆதரித்தார். பின்னர் காங்கிரஸை ஆதரித்தார். எங்க ஆதரவு இல்லாம யாருமே ஆட்சியமைக்க முடியாது என்று திடீரென கூறி அவரையே அதிர்ச்சியில் ஆழ்த்திக் கொள்வார்.
ஏன்தான் இவ்ளோ குழப்பமோ
சமீபத்தில் சத்தியமூர்த்தி பவனுக்கு திடீரென சட்டை பேன்ட், கூலர் போட்டுக் கொண்டு கிளம்பி வந்த கார்த்திக், ஈவிகேஎஸ், இளங்கோவனைச் சந்தித்தார். வாசன் போன கடுப்பில் இருந்த காங்கிரஸாருக்கு கார்த்திக்கின் வருகை, ஐப்பசி மாத அடை மழை போல சந்தோஷத்தைக் கொடுத்தது. வரவேற்று பொன்னாடையெல்லாம் போர்த்தி குதூகலித்தனர். காங்கிரஸில் சேர்ந்த கார்த்திக்குக்கு நன்றி என்றெல்லாம் கூட பேசினர். அதையெல்லாம் அமைதியாக சிரித்தபடி கேட்டுக் கொண்டிருந்தார் கார்த்திக்.
கோவில்.. சாமி... கல்யாணம்.. விவாகரத்து!
பின்னர் வெளியில் வந்த கார்த்திக் செய்தியாளர்களிடம் பேசுகையில், மீண்டும் கோவிலுக்குள் வந்துள்ளன். இனி எப்போதும் இங்கேயேதான் இருப்பேன். இந்தத் திருமணம் விவாகரத்து ஆகாது என்றெல்லாம் உணர்ச்சிகரமாக பேசினார்.
இட் அது பட் ஆனால் வாட் என்ன....!
ஆனால் அடுத்த விநாடியே, ஆனா பிரதமர், நான் கட்சியையெல்லாம் இணைக்க வரவில்லை. அதெல்லாம் பெரிய விஷயம் பிரதர். ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு என்பதைக் கூறத்தான் வந்தேன் என்று கூறி விட்டார்.
டிரைவர்.. காரை எடு!
அதற்கு மேலும் செய்தியாளர்கள் கேட்க ஆரம்பித்தபோதுதான் தான் ஏதோ குழப்பமாக பேசியதாக உணர்ந்திருப்பார் போல கார்த்திக். உடனே, டிரைவர் காரை எடு.. ஏங்க, என் கார் அங்க நிக்குது, அதை எடுத்துட்டு வரச் சொல்லுங்க என்று அருகில் இருந்தவரிடம் உத்தரவிட்டார்.
அட, நாந்தான் ஓட்டிட்டே வந்தேனா...!
அவரும் டிரைவரிடம் சொல்ல காரிடம் ஓடினார். ஆனால் கார் மட்டும்தான் இருந்தது. டிரைவர் இல்லை. அதை அவர் ஓடி வந்து கார்த்திக்கிடம் சொல்ல, அட ஆமாம், நான்தான் காரை ஓட்டிட்டு வந்தேன், மறந்தே போய்ட்டேன் என்று கூறியபடி எழுந்து காரை நோக்கிப் போனார்.
மூளையுள்ள ஒரே நடிகர் கார்த்திக்தான்... ஈவிகேஎஸ்!
இந்த சந்திப்பின்போது தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசியபோது, கார்த்திக்கை வெகுவாக புகழ்ந்தார். அப்போது அவர் கூறியதில், தமிழக நடிகர்களில் மூளையுள்ள ஒரே நடிகர் கார்த்திக்தான் என்று கூறியதுதான் ஹைலைட்டானது.!