மோடியை தொகுதிக்கு வரவழைப்பதில் வைகோ, விஜய்காந்த், அன்புமணி போட்டா போட்டி!!
சென்னை: பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை தாங்கள் போட்டியிடும் தொகுதிக்கு வரவழைத்துவிட வேண்டும் என்பதில் கூட்டணிக் கட்சித் தலைவர்களிடையே கடும் போட்டி உருவாகியுள்ளதாம்.
லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதிமுக, தேமுதிக, பா.ம.க. உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டணி உருவாவதற்கும் தொகுதி பங்கீட்டுக்கும் ஐக்கிய நாடுகள் சபைதான் தலையிட வேண்டும் என்று பேசுகிற அளவுக்கு அத்தனை ஆயிரம் மல்லுக்கட்டுகள் நிகழ்ந்தன.
பின்னர் ஒருவழியாக குத்து வெட்டு இருந்தாலும் கூட்டணி அறிவிக்கப்பட்டு பிரசார களத்துக்கும் போய் வேட்புமனுத்தாக்கலும் நடந்தேறி வருகிறது. இந்த நிலையில் பாஜக கூட்டணியில் யார் தொகுதிக்கு மோடியை அழைப்பது என்பதில் கூட்டணித் தலைவர்களிடையே அறிவிக்கப்படாத குத்து வெட்டு யுத்தம் தொடங்கியிருக்கிறதாம்.
விருதுநகரில் மோடி?
மதிமுக பொதுச்செயலர் வைகோவைப் பொறுத்தவரையில் எப்படியும் மோடியை விருதுநகர் தொகுதிக்கு வரவழைத்துவிட வேண்டும் என்று பகீர பிரயத்தனம் மேற்கொண்டிருக்கிறராம். இதற்காக ராஜ்நாத்சிங்கையும் ராம் ஜெத்மலானியையும் வைத்து மூவ் செய்து கொண்டிருக்கிறாராம் வைகோ.
அன்புமணியும் போட்டி
வைகோவின் இந்த முயற்சியைக் கேள்விப்பட்ட பாமகவின் அன்புமணி ராமதாஸோ, தாம் போட்டியிடும் தருமபுரி தொகுதிக்கு எப்படியும் மோடியை அழைத்து வரவேண்டும் என்ற முயற்சியில் குதித்திருக்கிறாராம்.
சேலத்துக்கு கேப்டன் முயற்சி
வைகோ, அன்புமணியின் முயற்சியில் கடுப்பாகிப் போன தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த், மச்சான் சுதீஷ் போட்டியிடும் சேலத்துக்கு அழைத்துவர களத்தில் இறங்கியிருக்கிறாராம்.
பொன்னர் ப்ளான்
இப்படி கூட்டணித் தலைவர்கள் ஆளுக்கொரு திசையில் மோடியை பிடிக்க போராடுவதால் பாஜக தலைவர் பொன் .ராதாகிருஷ்ணன் தாம் போட்டியிடும் கன்னியாகுமரி தொகுதியிலும் கோயம்புத்தூரிலும்தான் மோடி பேச வேண்டும் என்று பிடிவாதம் காட்டி வருகிறாராம்.
ஆக தேர்தல் முடியும் வரை பாஜக அணி ரணகளமாத்தான் இருக்கும் போல.