கோவை: பாஜக வேட்பாளர் மீது அதிமுகவினர் கண்மூடித்தனமான தாக்குதல் – கார் ஏற்றி கொல்ல முயற்சி
கோவை: கோயமுத்தூர் மாநகராட்சியில் பாஜக சார்பில் போட்டியிடும் மேயர் வேட்பாளர் நந்தகுமார் இன்று அதிமுகவினரால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டார்.
கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நகர் முழுவதும் போலீசார் ரோந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.
உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரம் செவ்வாய்கிழமை மாலையுடன் ஓயந்தது. பிரசாரம் முடிந்ததும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உடனே வெளியேற வேண்டும் என்று தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி இருந்தது.
இந்த நிலையில் புதன்கிழமை காலை கோவை சவுரிபாளையம் பகுதியில் போடிநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் பணம் பட்டுவாடா செய்வதற்காக நின்று கொண்டிருப்பதாக பாஜக வேட்பாளர் நந்தகுமாருக்கு தகவல் கிடைத்தது. மறுநிமிடமே நந்தகுமாரும் மற்றும் பாஜக தொண்டர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
‘வெளிமாவட்டத்தை சேர்ந்த நீங்கள் ஏன் இங்கு நிற்கிறீர்கள், உடனே இங்கிருந்து வெளியேறுங்கள்' என்றனர். இதனால் அ.தி.மு.க.வினர் ஆத்திரமடைந்து ‘எங்களை வெளிறேச் சொல்ல நீங்கள் யார்? என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அந்த சமயத்தில் அ.தி.மு.க.வினர் பாஜக வேட்பாளர் நந்தகுமாரை தாக்கியதோடு காரை ஏற்றி கொல்ல முயன்றதாகவும் தெரிகிறது. அங்கிருந்து பாஜக தொண்டர்கள் வேட்பாளரை பிடித்து இழுத்ததால் அவர் உயிர் தப்பினார். இதனையடுத்து அந்த பகுதியில் பரபரப்பும்- பதட்டமும் நிலவியது.
இந்த களேபரம்பற்றி அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வாக்குவாதம் மற்றும் கைகலப்பில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரையும், பாஜகவினரையும் சமாதானம் செய்து அங்கிருந்த அனுப்ப முயன்றனர். அவர்களின் முயற்சிக்கு பலன் இல்லை.
இந்த நிலையில் சிங்காநல்லூர் எம.எல்.ஏ. சின்னசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சின்னசாமி எம்.எல்.ஏ.யுடன் வந்த காரும் அடித்து நொறுக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க. வினர் பாஜக கொடி கட்டப்பட்டிருந்த வாகனத்தை அடித்து நொறுக்கினர். தொடர்ந்து பதட்டம் நிலவுவதால் அந்த பகுதியில் துணை கமிஷனர் பர்வேஸ்குமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதை அடுத்து, பீளமேடு காவல்நிலையம் முன் குவிந்த பாஜகவினர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். அவர்களுடன் கூட்டணிக் கட்சிகளான மதிமுக தேமுதிக கட்சி நிர்வாகிகளும் உடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications