புழல் சிறையில் கைதிகளிடமிருந்து செல்போன், கத்திகள் பறிமுதல் - போலீசார் அதிர்ச்சி
புழல் ஜெயிலில் கைதிகளிடமிருந்து செல்போன், கத்திகளை காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை: புழல் சிறையில் கைதிகளிடம் செல்போன், கத்திகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புழல் மத்திய சிறையில் 700-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்நிலையில் கைதிகளிடம் கஞ்சா புழக்கம் இருப்பதாக அடிக்கடி புகார்கள் வந்தன. மேலும் செல்போன்களை பயன்படுத்தி வெளியில் உள்ள ரவுடிகளிடம் கைதிகள் பேசுவதாகவும் புகார் கூறப்பட்டது. சமீபத்தில் வெளியில் இருந்து சிறைக்குள் கஞ்சா பொட்டலங்கள் வீசிய சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து புழல் ஜெயிலில் போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி வருகிறார்கள். இருந்தபோதும் கைதிகளிடம் செல்போன் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் புழல் சிறையில் செல்போன், கஞ்சா போன்ற போதை பொருட்கள் பயன்படுத்துவது அதிகரித்து உள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் மாதவரம் துணை கமிஷனர் கலைச் செல்வன், எண்ணூர் உதவி கமிஷனர் தினகரன், புழல் உதவி கமிஷனர் பிரபாகரன் மற்றும் 63 போலீசார் இன்று காலை புழல் சிறையில் அதிரடி சோதனை மேற்கொண்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கைதிகள் இருந்த ஒவ்வொரு அறைக்கும் தனித்தனியாக சென்று இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், கைதி ஒருவரிடம் செல்போன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல, மற்றொரு கைதியிடம் 2 சிறிய கத்திகள் இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து செல்போன், மற்றும் கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அத்துடன் செல்போன் சார்ஜர், சிம்கார்டு, ரூ.500 பணம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜெயிலுக்குள் செல்போன், கத்திகள் பறிமுதல் செய்தது குறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறைக்குள் பணம், செல்போன், மற்றும் கத்திகள் எப்படி வந்தன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.