ரயில் ஓடும்போது குண்டு வெடிக்கத் திட்டமிட்டிருந்த தீவிரவாதிகள்.. பலிக்காததால் பேரழிவு தடுப்பு
சென்னை: குவஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் வைக்கப்பட்ட வெடிகுண்டு, ரயில் ஓடும்போது வெடிக்கும் வகையில் செட் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அது தவறி ரயில் சென்னை வந்து சேர்ந்ததும் வெடித்ததால்தான் மிகப் பெரிய பேரழிவு தடுக்கப்பட்டுள்ளதாக வெடிகுண்டு நிபுணர்கள் கூறியுள்ளனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், குவஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த வெடிகுண்டுச் சம்பவம் குறித்து விசாரித்து வரும் நிபுணர்கள் இக்கருத்தைத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், வெடித்தது சாதாரண திறன் கொண்ட குண்டுதான். ஆனால் அந்த குண்டுகளை பயன்படுத்தத் திட்டமிட்டிருந்ததுதான் பயங்கரமானது.
அதாவது ரயில் ஓடிக் கொண்டிருக்கும்போது இதை வெடிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளனர். இது டைம் பாம் குண்டுதான்.
இந்த குண்டு ஓடும் ரயிலில் வெடித்திருந்தால் மிகப் பெரிய பேரழிவு ஏற்பட்டிருக்கும். அதாவது ரயிலில் தீப்பிடித்து பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும். ரயில் பெட்டிகள் தடம் புரண்டு பலர் உயிரிழந்திருப்பார்கள். மிகப் பெரிய சேதத்தை நாம் சந்தித்திருப்போம். அதைத்தான் தீவிரவாதிகளும் எதிர்பார்த்துள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக ரயில் நிலையத்திற்குள் வந்த பின்னர் குண்டு வெடித்ததால் சிறிய இழப்போடு இது நின்று விட்டது என்றனர்.