சென்னை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய அசாம், வங்க தேச வாலிபர்களிடம் தீவிர விசாரணை
சென்னை: சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அசாம் மற்றும் வங்கதேச வாலிபர்களுக்கு சென்னை குண்டுவெடிப்பில் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கடந்த ஒன்றாம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற இரட்டை குண்டுவெடிப்பில் இளம்பெண் ஒருவர் பலியானார். 14 பேர் படுகாயடமைந்தனர். இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்திய சதிகாரர்களைப் சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அசாம் வாலிபர் ஒருவர் அரக்கோணம் ரயில் நிலையத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்டார். அதேபோல், சென்னை எண்ணூரில் பாஸ்போர்ட் இல்லாமல் சுற்றித்திரிந்த வங்கதேச வாலிபர் ஒருவரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடன் நடத்தப்பட்ட விசாரணையில், அரக்கோணத்தில் கைது செய்யப் பட்ட வாலிபர் இரிடியம் திருடும் கும்பலைச் சேர்ந்தவர் என்றும், எண்ணூரில் கைது செய்யப் பட்ட வாலிபர் மனநிலை பாதிப்படைந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.
ஆனபோதும், கைது செய்யப்பட்டவர்களிடம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு சம்பவம் குறித்தும் விசாரணை நடைபெற்றது.
இதுவரை கிடைத்த தகவல்களின் படி, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் பட்ட அந்த அசாம் மற்றும் வங்கதேச வாலிபர்களுக்கு சென்னைக் குண்டுவெடிப்பில் சம்பந்தம் இல்லை எனத் தெரிய வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆயினும், அரக்கோணம் வாலிபர் மீது இரிடியம் திருட்டு தொடர்பாகவும், வங்க தேச வாலிபர் மீது பாஸ்போர்ட் உள்ளிட்ட முறையான ஆவணம் இல்லாதது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப் படும் எனத் தெரிகிறது.