நீதிபதியின் மனைவிக்கே பாதுகாப்பு இல்லை.. தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்ற திருடர்கள்!
Recommended Video
கோவை: கோவை அருகே சூலூரில் டூவீலரில் சென்ற நீதிபதியின் மனைவியின் தாலிச் சங்கிலியை திருடர்கள் பறித்துச் சென்ற செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூலூர் உரிமையியல் கோர்ட்டில் நீதிபதியாக இருந்து வருபவர் செல்வ பாண்டியன். இவர் தனது குடும்பத்துடன் சூலூர் அருகே ரங்கநாதபுரத்தில் வசித்து வருகிறார். நேற்று இரவு, தனது மனைவி மகேஸ்வரியுடன் டூ வீலரில் கோவிலுக்குப் போயிருந்தார். போய் விட்டு இருவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது சூலூர் பெரிய குளத்தருகே வரும் போது இவர்களுக்கு பின்னால் இரு சக்கரவாகனத்தில் வந்த இருவர் நீதிபதியின் மனைவியின் கழுத்தில் இருந்த 9 பவுன் தாலிக்கொடியை பறித்துச்சென்றனர். இதனால் நீதிபதியும், அவரது மனைவியும் அதிர்ச்சி அடைந்தனர்.
சூலூர் பகுதியில் தொடர் திருட்டு நடைபெற்று வருகிறது. இது இப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சனிக்கிழமை கோவையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளருடன் சூலூரில் உள்ள அனைத்துகட்சி பிரமுகர்கள் சந்தித்து இதுபற்றி புகார் தெரிவித்திருந்தனர்.
சூலூர் காவல் நிலையத்தில் காவலர்கள் குறைவாக உள்ளனர் இதனை சரி செய்ய வேண்டும் என கோரிக்கையும் வைத்தனர். மக்களும் திருட்டைத் தடுக்க காவலர்களை அதிகரித்து, ரோந்துப் பணியையும் அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.