சீனப்பட்டாசு விற்பனையைத் தடுக்க தனிப்படை... தமிழக அரசுக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: சீனப்பட்டாசு விற்பனையை தடுக்க தனிப்படை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தீபாவளி என்றாலே முதலில் நினைவிற்கு வருவது புத்தாடைகளும், பட்டாசும் தான். இந்தியா முழுவதும் 930 பட்டாசு தயாரிக்கும் நிறுவனங்கள் இருக்கின்றன. அவற்றில் 805 நிறுவனங்கள் சிவகாசியில் உள்ளன.
குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசியை பட்டாசு தொழிலின் தாய்வீடு என்றே கூறலாம். லட்சக்கணக்கான தொழிலாளர்கள், நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகளில் உயிரை பணயம் வைத்து, ஆபத்தான சூழ்நிலையில் பணியாற்றி வருகின்றனர்.

இந்தியாவில் பட்டாசு உற்பத்தியில் 5 லட்சம் பேர் நேரடியாகவும், 85 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று வருவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.ஆனால், சீனப்பட்டாசுகளின் வரவால் சிவகாசி மிகப்பெரிய அச்சுறுத்தலை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளது.
சீனப்பட்டாசுகளின் வரவால் கடந்த ஆண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 35 சதவீத பட்டாசுகள் தேக்கமடைந்து, பட்டாசு தொழிற்சாலைகளுக்கு இழப்பு எற்பட்டது. வணிக ரீதியாக மட்டுமின்றி மக்களிற்கு ஆபத்து விளைவிப்பவை சீன பட்டாசுகள். பொட்டாசியம் குளோரைடு, பொட்டாசியம் பெர்குளோரைடு உள்பட பல்வேறு ஆபத்து விளைவிக்கும் வேதி பொருட்கள் அதில் அடங்கியுள்ளன.
எனவே, சீன பட்டாசுக்கள் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுவதைத் தடை செய்ய கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டாசு விற்பனையாளர்கள் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், சீனப்பட்டாசு விற்பனையை தடுக்க தனிப்படை அமைக்க வேண்டும் என இன்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சீனப்பட்டாசு நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ள அவர், சீனப்பட்டாசு இறக்குமதி செய்யப்பட்டால் அவற்றை அரசு பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட சீனப்பட்டாசுகளை உடனே அழிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications